ஒற்றை தலைவலியான மைக்ரேன் வருவதற்கு பல காரணங்கள் உள்ளது.
மூளைக்கு செல்லும் இரத்தக்குழாய் விரிவடைவதால் இந்த தலைவலி ஏற்படுவதாக கூறப்படுகிறது. ஒரு பக்கம் மட்டும் பாதிக்கப்படுவதால் இதனை ஒற்றை தலைவலி என்கிறோம்.
காபி, இரவு நேர பார்ட்டிகள், தூக்கமின்மை, ஆல்கஹால், மன அழுத்தம் போன்றவை ஒற்றை தலைவலி தீவிரமடைவதற்கான காரணங்களாகும்.
கண்ணில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கூட ஒற்றை தலைவலி ஏற்படலாம். இதனை உணராமல் தற்காலிகமாக மாத்திரை எடுத்து கொண்டு தகுந்த சிகிச்சை பெறாமல் இருந்தால் பார்வை இழப்பு கூட ஏற்படலாம்.
அறிகுறி
ஒரு பக்கத்தில் மட்டும் ஏற்படும் வலி பொறுத்து கொள்ளக்கூடியதில் இருந்து அதி தீவிரமான வலி வரை உள்ளது. எழுந்து நடமாடினால் இன்னும் வலி தீவிரமடையும்.
கண்டறிவது எப்படி?
நோயாளி கூறும் அறிகுறிகளை வைத்து கண் மருத்துவர் இது மைக்ரேன் தலைவலி தானா? என்பதை உறுதி செய்வார்.
கண்களுக்கு செல்லும் இரத்த தமனிகளில் ஏற்படுகின்ற தற்காலிக தடை, விழித்திரைக்கு இரத்தம் கொண்டு செல்கின்ற தமனியில் இழுப்பு, சிலவகையான ஆட்டோ இம்யூன் டிஸ்ஆர்டர் பாதிப்பு போன்றவற்றில் ஏற்பட்ட தலைவலியா என பார்ப்பர்.
ஒரு பக்க சைனஸ் பிரச்சனை இருந்தால் அது மைக்ரேன் தலைவலி போன்றே இருக்கும். தலைவலியுடன் வாந்தியும் இருந்தால் அது மூளையில் கட்டி இருப்பதற்கான அறிகுறியாகும்.
கண்ணாடி அணிந்தால் தலைவலி வருமா?
கண்ணாடி அணிவதாலும் தலைவலி உண்டாகும். கண்ணில் உள்ள பவர் காரணமாக ஏற்படும் தலைவலி கண்களுக்கு அதிக வேலை கொடுத்ததும் அதிகமாக ஏற்படும்.
கண் மூளையுடன் இணையும் பகுதி வீங்கி இருந்தால் அது ஒற்றை தலைவலி இல்லை. கண்ணின் பகுதி சாதாரணமாக இருக்க வேண்டும். பார்வை நரம்பு தெளிவாக இருக்க வேண்டும்.
ஆப்டிக் டிஸ்க் எனப்படுகிற பார்வை நரம்பானது நன்றாக இருக்கவேண்டும். மேலும் கீழும் பார்க்கும் போது தசைகளின் அசைவில் சமநிலையின்மை இருக்கக்கூடாது.
இந்த சோதனை அனைத்தினையும் செய்த பின்னரே இது ஒற்றை தலைவலியா அல்லது சாதாரண தலைவலியா என முடிவு செய்ய வேண்டும்.
தலைவலி வந்தால் செய்யவேண்டியது
ஒரு சில நிமிடம் நீடிக்கும் மைக்ரேன் தலைவலி இத்தனை நாட்களில் குணமாகிவிடும் எனக் கூறுவது கடினம். ஒரு சிலருக்கு வெயிலில் சென்று வந்தால் தலைவலி வந்துவிடும்.
சிலருக்கு பளிச் என வெளிச்சம் தெரியும். இன்னும் சிலருக்கு வித்தியாசமான வாசனை தெரிந்தவுடன் தலைவலி வந்துவிடும்.
தலைவலி வந்தவுடன் செய்கின்ற வேலையினை விட்டு விட்டு சிறிது ஓய்வு எடுப்பது நல்லது. தூக்கத்திற்காக மாத்திரைகளை எடுத்து கொள்வது மிக தவறு.
மைக்ரேன் தலைவலியின் வீரியத்தினை குறைப்பதற்காக சில பிரத்யேக மருந்துகள் உள்ளது. இதனை எடுத்து கொள்வதன் மூலமாக வலியின் வீரியத்தினை குறைக்கலாம்.
மைக்ரேன் தலைவலி பெரும்பாலும் மெனோபஸ் வயதில் இருக்கும் பெண்களுக்கே அதிகமாக வருகிறது.