ஹாங்காங் பேட்மிண்டன் தொடரில் ஜப்பான் வீராங்கனையை வென்று இந்திய வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
ஹாங்காங் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி கெவ்லோன் நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி. சிந்து வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
இந்நிலையில், இன்று இரண்டாவது சுற்று போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவும், ஜப்பான் வீராங்கனை அயா ஒஹோரியும் மோதினர்.
முதலில் இருந்தே சிந்து சிறப்பாக விளையாடினார். இதனால் அவர் 21- 14 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார்.
இதையடுத்து, இரண்டாவது செட்டில் ஜப்பான் வீராங்கனை கடுமையாக போராடினார்.
ஆனாலும், சிந்துவின் அற்புதமான ஆட்டத்தின் முன்பு, ஜப்பான் வீராங்கனையின் போராட்டம் வீணானது. இதைத்தொடர்ந்து, இரண்டாவது செட்டை 21- 17 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
இறுதியில், விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் பி.வி. சிந்து 21-14, 21-17 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதையடுத்து, இந்திய வீராங்கனை சிந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.