ரஷ்யாவில் நடைபெறும் உலக கோப்பை கால்பந்து தொடரின் முதல் போட்டியில் ரஷ்யா அணி வெல்லும் என ‘அசிலிஷ்’ என்ற பூனை கணித்துள்ளது.
அந்த வகையில் நேற்று ஆரம்பமான உலக கோப்பை கால்பந்து தொடரில் முதல் லீக் போட்டியில் மோதிய ரஷ்யா – சவூதி அணிகளுக்கிடையிலான போட்டியில் 5-0 என்ற கோல் கணக்கில் ரஷ்யா அணி வெற்றி பெற்று 3 புள்ளிகளை பெற்றுள்ளது.
2010-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலக கோப்பை தொடரின் போது முடிவுகளை கணிப்பதில் ‘பால்’ என்ற ஆக்டோபஸ் கடல் வாழ் உயிரினம் கதாநாயகனாக விளங்கியது.
ஜேர்மனி அணி மோதிய அனைத்து ஆட்டங்களையும் துல்லியமாக கணித்த ஆக்டோபஸ், ஸ்பெயின் அணி கோப்பையை வெல்லும் என்று சுட்டிக்காட்டியமை அப்படியே பலித்தது.
இம்முறை உலக கோப்பை போட்டியை நடத்தும் ரஷ்யா, ஆட்டத்தின் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை கணிக்க ‘அசிலிஷ்’ என்ற பூனையை தயார்படுத்தியுள்ளது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மியூசியத்தில் உள்ள இப்பூனைக்கு அனா கசட்கினா என்பவர் பயிற்சி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேற்று நடைபெற்ற போட்டியை கண்டுகளிக்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், சவுதி அரேபியா இளவரசர் மொகமது பின் சல்மான், பீபா அமைப்பின் தலைவர் ஜியான்னி இன்பாண்டினோ ஆகியோர் வருகைதந்திருந்தனர்.
இன்று நடைபெறவுள்ள லீக் போட்டிகளில் எகிப்து – உருகுவே , மொராக்கோ – ஈரான், போர்ட்டுகல் – ஸ்பெயின் அணிகள் மோதவுள்ளன.
.