ஈராக் மற்றும் சிரியாவைச் சேர்ந்த இரு அகதிகள் ஜேர்மானியர் ஒருவரை கத்தியால் குத்தியதில் அவர் உயிரிழந்ததையடுத்து ஜேர்மனியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
சண்டைக்கு என்ன காரணம் என்று தெரியாவிட்டாலும் ஞாயிறன்று உள்ளூர் நேரப்படி 3.15 மணியளவில் ஒரு விழாவுக்காக மக்கள் கூடியிருந்த இடத்தில் நடந்த ஒரு சண்டையில் ஜேர்மானியர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார்.
35 வயதான தச்சு வேலை செய்யும் அந்த நபர் மோசமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவருடனிருந்த இன்னும் இரண்டு ஜேர்மானியர்களுக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதற்காக பிரச்சினை கிளம்பியதாக சமூக ஊடகங்களில் செய்தி பரவினாலும் பொலிசார் அதை மறுத்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சுமார் 100 பேர் பேரணி ஒன்றில் பங்கேற்றனர்.
என்றாலும் பின்னர் Chemnitz பகுதியின் மையத்தில் இன்னும் 800 பேர் திரண்டனர். இதற்கிடையில் ஜேர்மானியர்கள் போல் தோற்றமளிக்காத சிலர் எதிர்ப்பாளர்களால் தாக்கப்பட்டனர்.
வலது சாரியினர் இன்னும் அதிகம் பேர் பேரணிக்கு திரண்டு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
நகரத்தை கட்டுப்படுத்துவது யார் என்று காட்டுவோம் என்று கூறி, பேரணியில் பங்கேற்றவர்கள் ஆங்காங்கே வன்முறையில் இறங்கினர்.
ஆனால் இந்த வன்முறையைக் கண்டித்துள்ள அரசின் செய்தி தொடர்பாளர் Steffen Seibert, ஜேர்மனியில் இத்தகைய வன்முறைக்கு இடமில்லை என்று தெரிவித்துள்ளதோடு சட்டத்தை கையிலெடுப்பதற்கும், மக்கள் தெருக்களில் வெறுப்பை பரப்புவதற்கும், பொறுமையின்மைக்கும், இன வெறிக்கும் ஜேர்மனியில் இடமில்லை என்று தெரிவித்துள்ளார்.