இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் உள்ள நகரம் ஒன்றில் அமைந்துள்ள வீடுகள் மற்றும் வங்கிகளுக்கு கதவுகளே இல்லை.
மராட்டிய மாநிலத்தில் உள்ள அஹ்மத்நகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது சனி ஷிங்னாபூர் கிராமம். சுமார் 200 வீடுகளே இங்கு உள்ளது.
இங்குள்ள மக்கள் தங்கள் கடவுளாக சனி பகவானை வழிபட்டு வருகின்றனர். மட்டுமின்றி சனி பகவான் மீது கொண்ட அதீத பக்தியால் கடந்த 300 ஆண்டுகளாக இங்குள்ள குடியிருப்புகளில் கதவுகளே இல்லை.
வீடுகளில் மட்டுமல்ல, வங்கிகள், காவல்துறை அலுவலகங்கள், வங்கி உள்ளிட்ட எந்த கட்டிடங்களிலும் கதவு இல்லை.
மட்டுமல்ல இங்கு பூட்டு விற்பனை செய்யும் கடை கூட இல்லை. சனி பகவான் மீது கொண்ட நம்பிக்கை ஒன்றினால் மட்டுமே இங்குள்ள மக்கள் தங்கள் வீடுகளுக்கு கதவு இல்லாமலும், பூட்டு போடாமலும் உள்ளனர்.
ஆனால் வீட்டுக்குள் இருக்கும் அறைகளில் அந்தரங்கம் மதிக்கப்படுவதற்காக திரைகளை பயன்படுத்துகின்றனர்.
இங்குள்ள மக்கள் வீட்டை அப்படியே விட்டுவிட்டு பல நாட்கள் வேலை நிமித்தம் வெளியூர் செல்கின்றனர். மிருகங்கள் உள்ளே சென்றுவிடாமல் இருக்க வாசலின் பாதி அளவுக்கு மறைத்து விட்டு செல்கின்றனர்.
எவரேனும் இங்கு வந்து கொள்ளையிடவோ களவாடவோ செய்தால் சனி பகவானின் தண்டனையில் இருந்து தப்ப முடியாது எனவும், அதனால் எவரும் அதற்கு துணிவதில்லை என கிராமத்து முக்கியஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.
மட்டுமின்றி கதவுகளை பூட்டிவிட்டு சென்ற பலரும் இதற்கு முன்னர் விபத்தில் சிக்கியுள்ளதாகவும், தொழிலில் பெரும் இழப்பை எதிர்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
17 ஆம் நூற்றாண்டில் ஆடு மேய்க்கும் நபர் ஒருவருக்கு ஒற்றைக்கல் சிற்பம் ஒன்று ஆற்றில் மிதந்து வருவது தெரியவந்துள்ளது.
அந்த சிற்பத்தை கரைக்கு கொண்டுவந்த ஆட்டிடையனுக்கு அன்றிரவு கனவில் சனி பகவான் தோன்றி, கோவில் ஒன்றை கூரை மற்றும் வாசல் இன்றி கட்டி முடிக்க அணுமதி அளித்துள்ளார்.
மட்டுமின்றி தினசரி வழிபட்டு வந்தால் அந்த கிராமத்தில் கொள்ளை, களவு என எதுவும் நடக்காது எனவும் உறுதி அளித்துள்ளார்.
அதன் பின்னரே இங்குள்ள எந்த குடியிருப்புக்கும் கதவு மற்றும் பூட்டு இன்றி இருப்பதாக இங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.