பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் தசாரா பண்டிகையையொட்டி, ராவணன் உருவபொம்மை எரிப்பதைப் பார்த்துக்கொண்டிருந்த மக்கள் மீது ரயில் மோதியது.
இந்த விபத்தில் 60 பேர் வரை பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று தசாரா பண்டிகை நாடுமுழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, அமிர்தசரஸில் உள்ள சவுரா பஜார் பகுதியில் ராவணன் உருவபொம்மை நிகழ்ச்சி இன்று மாலை நடந்தது.
அப்போது, ராவணன் உருவபொம்மை எரிக்கும் நிகழ்வு நடக்கும் இடத்துக்கு அருகே ரயில்வே தண்டாளம் செல்கிறது. இதனால், ராவணன் பொம்மை எரிப்பு நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் கூடி இருந்தனர். அப்போது, ரயில் தண்டவாளத்தை மறித்தும் ஏராளமான மக்கள் நின்றிருந்தனர். ராவணன் பொம்மை எரிக்கப்பட்டபோது, பட்டாசு வெடிக்கப்பட்டது.
பட்டாசு வெடிக்கும் சத்தத்தில் தண்டவாளத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் சத்தமும், ரயிலையும் மக்கள் கவனிக்கவில்லை. அப்போது வேகமாக வந்த ரயில், தண்டவாளத்தில் நின்றிருந்த மக்கள் மீது கண்ணிமைக்கும் வேகத்தில் மோதிவிட்டுச் சென்றது.
அப்போது தண்டவாளத்தில் நின்றிருந்த மக்கள் நாலாபுறமும் தூக்கி வீசப்பட்டு, உடல்கள் ஆங்காங்கே சிதறிக்கடந்தன.
இந்த விபத்தில் கிடைத்த முதல் கட்ட தகவலின்படி 60-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.