மேற்கு பிரான்சில் கடந்த சில வாரங்களாக பல விவசாயிகளுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, பரவலாக பயன்படுத்தப்படும் பூச்சி மருந்து ஒன்றிற்கு பிரான்ஸ் அரசு மூன்று மாதங்கள் தடை விதித்து நேற்று உத்தரவிட்டது.
Lamb’s lettuce அல்லது cornsalad என்று அழைக்கப்படும் கீரை ஒன்றை அதிகம் பயிர் செய்யும் பிரான்சின் Angers நகருக்கருகே உள்ள விவசாயிகள் திடீரென கண் எரிச்சல் மற்றும் சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டதையடுத்து, metam sodium என்னும் ரசாயனம் அதற்கு காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Cornsalad, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவில் சாலடுகளில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு கீரையாகும்.
இந்த கீரையை பயிரிடும்போது பல்வேறு பூச்சிகள் கீரையைத் தாக்குவதைத்தடுப்பதற்காக விவசாயிகள் metam sodium என்னும் ரசாயனப் பொடியை நிலத்தில் தூவுவார்கள்.
ஆனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மிக அதிகம் பயன்படுத்தப்படும் இந்த ரசாயனம், புற்றுநோயை ஏற்படுத்தலாம் என அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஏஜன்சி தெரிவித்துள்ளதோடு, அந்த ரசாயனத்தை நேரடியாக தாவரங்கள் மீது தூவக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வறண்ட சீதோஷ்ணம் இருக்கும்போது தவறான முறையில் அந்த ரசாயனம் நிலத்தின்மீது தூவப்பட்டதால், செப்டம்பர் 28இலிருந்து இதுவரை மூன்று முறை கூட்டம் கூட்டமாக பலர் நோய்வாய்ப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட 61 பேரில் 17 பேர் சிறிது காலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய சூழலும் ஏற்பட்டதையடுத்து உள்ளூர் அதிகாரிகள் metam sodium ரசாயனத்தை இம்மாத துவக்கத்தில் தடைசெய்தனர்.
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானின் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகள், நமது விவசாயிகள் மற்றும் குடிமக்களின் நலனுக்காக எடுக்கபட்ட அறிவுப்பூர்வமான முடிவு இது என்று கூறியுள்ளனர்.
Metam sodium ரசாயனத்திற்கு மாற்றாக வேறு மருந்துகளை தயாரிக்க உற்பத்தியாளர்களுக்கு நாம் உதவ வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Metam sodium எனும் பூச்சி மருந்து Vapam மற்றும் Sectagon என்னும் பெயர்களில் சந்தையில் விற்கப்பட்டு வருகிறது.