எரிபொருள் வரி உயர்வைக் கண்டித்து பிரான்சில் உச்சக்கட்டப் போராட்டம் நடைபெறவுள்ள நிலையில் ஈபிள் டவர் இழுத்து மூடப்படவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
பிரான்ஸ் நாட்டில் எரிபொருளுக்கான வரி அண்மையில் உயர்த்தப்பட்டது. தொடர்ந்து அன்றாட வாழ்வாதார பொருட்களுக்குமான விலையும் மின்னல் வேகத்தில் உயர்ந்தது. இதனால் ஒரே வருடத்தில் பெற்றோலின் விலை 23 சதவீதம் வரை உயர்ந்தது.
இந்த விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது.
இந்தப் போராட்டம் கலவரமாக மாறி பல்வேறிடங்களில் மறியல்,வாகனங்களுக்குத் தீ வைத்தல்,கட்டங்களை அடித்து நொறுக்குதல்,பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்துதல் என வன்முறை உச்சக்கட்டமாக மாறியுள்ளது.
கலவரத்தைக் கட்டுப்படுத்த முயற்சித்த பொலிஸார் மீது கற்களை வீசியும், இரும்பு ஆயுதங்களை வீசியும் தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறியுள்ளது.
மேலும் முகமூடி அணிந்து கொண்ட இளைஞர்கள் கத்தி, கோடாரி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சாலைகளில் வலம் வருகின்றனர். இந்த கலவரத்தில் இதுவரையில் 133 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். 400 இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கலவரத்தைக் கட்டுப்படுத்த அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிக்கப்பட்டது. ஆனால், இந்தப் போராட்டத்துக்கு யார் தலைமை? என்பது தெரியாத காரணத்தால் அந்த முயற்சியும் பலிக்கவில்லை.
இந்நிலையில் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து இன்று சனிக்கிழமை மிகப்பெரிய அளவில் போராட்டம் நடாத்தப்படுமெனப் போராட்டக்காரர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால்,முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக தலைநகர் பாரிஸில் பொலிஸாருடன் இராணுவத்தினரும் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். மிகப்பெரிய கோபுரமான ஈபிள் டவரும் இழுத்து மூடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஈபிள் டவர் தாக்கப்படுமென வந்த செய்தியைத் தொடர்ந்தே அது தற்காலிகமாக மூடப்படுகின்றது.