அம்பாறையில் நபர் மீது கடுமையாக தாக்கிய மர்ம கும்பல், மோட்டார் வாகனத்தை தீக்கிரையாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாவிதன்வெளி பிரதேசத்திற்குட்பட்ட பகுதியில் இன்று அதிகாலை 1:30 அளவில் 11/133 ம் இலக்க மத்தியமுகாம் வீட்டிலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நான்கு பேர் கொண்ட கும்பல் வீட்டிற்கு வந்து சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். இதுகுறித்து தாக்குதலுக்குள்ளான கந்தமுத்து நடராசா என்பவர் கூறுகையில்,
வீட்டின் வெளி மண்டபத்தில் உறங்கிக்கொண்டிருந்த என்னை எழுப்பி நடராசா கிருபாகரன் எனும் வெளிநாட்டில் வசித்து வரும் எனது மூன்றாவது மகன் எங்கே? வரச்சொல்லு என விசாரித்து கையை மடக்கி தாக்கி கீழே தள்ளிவிட்டு வெளியில் வைக்கப்பட்டிருந்த எனது மூத்த மகனின் மோட்டார் சைக்கிளை பற்ற வைத்து விட்டு அச்சுறுத்தல் காரர்கள் வந்த இரண்டு மோட்டார் வாகனத்திலும் தப்பிச் சென்றதாகவும் தெரிவித்தார்.
கடந்த மாதமும் 2018-11-23 அன்று வந்த இக்கும்பல் இதுபோன்று விசாரித்து தாக்கியுள்ளனர். இது தொடர்பாக மத்தியமுகாம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் தொடர்பாக மத்தியமுகாம் பொலிசாரும், அம்பாறை தடயவியல் பகுப்பாய்வு பொலிசாரும் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.