காலி – மாத்தறை வீதியில் ஹதபெலேன பிரதேசத்தில் பேருந்தொன்றும், முச்சக்கரவண்டியொன்றும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் அஹங்கம பகுதியை சேர்ந்த 18 மற்றும் 20 வயதான இளைஞர்களே பலியாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை மாத்தறை – ஹக்மன கோங்கல 13 ஆவது மைல்கல் பகுதியில் பேருந்தொன்று பள்ளத்தில் கவிழ்ந்து இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்று இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மாத்தறை, கம்புருபிட்டிய மற்றும் தெய்யந்தர மருத்துவமனைகளில் தற்சமயம் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
63 வயதனா நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ள நிலையில், கதிர்காம யாத்திரைக்கு சென்று மீண்டும் திரும்பு கொண்டிருந்த வேளையே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
இதனுடன் தெனியாய – பெட்னா தோட்டத்தில் வேன் ரக வாகனம் ஒன்று 350 அடி பள்ளத்தில் கவிழ்ந்து இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.