‘பெய்ட்டி’ புயல் 24 மணிநேரத்தில் அதிதீவிரமாக வலுப்பெறும் என்பதனால், ஆந்திராவில் 22 பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற்று நகர தொடங்கி இருக்கின்றது. இந்த ‘பெய்ட்டி’ புயல் காரணமாக வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யுமென்றும், வங்கக்கடல் பகுதி கொந்தளிப்புடன் காணப்படுவதனாலும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில், புயலின் வேகம் 16 கி.மீற்றரில் இருந்து 23 கி.மீற்றராக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அருகே 320 கி.மீற்றர் தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது.
மேலும், மசூலிப்பட்டினத்துக்கு தென்கிழக்கே 160 கி.மீற்றர் தொலைவிலும், காக்கி நாடாவுக்கு தெற்கே 190 கி.மீற்றர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. புயலாக வலு குறைந்து பிற்பகல் காக்கி நாடா கடற்கரை அருகே கரையைக்கடக்குமென்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், ‘பெய்ட்டி’ புயல் கரையைக்கடக்கும் போது 70 – 90 கி.மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும். இதன் காரணமாக 22 பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.