கிளிநொச்சி – கண்டாவளை, கோரக்கன் கட்டு பகுதியில் கண்டாவளை பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி நிலையத்தினால் ஆடை வடிவமைத்தல் கண்காட்சி இடம்பெற்றுள்ளது.
கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையுடன் குறித்த கண்காட்சி இன்று முற்பகல் கோரக்கன் கட்டு பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது
தொழில் வாய்ப்பின்றி இருக்கின்ற பெண்களுக்கான தொழில் வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் வட மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் கண்டாவளை பிரதேச செயலகத்தின் மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் மூலம் ஆடை வடிவமைத்தல், உணவு தயாரித்தல் உள்ளிட்ட நான்கு வகையான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த பயிற்சியில் பங்கு பற்றியவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இந்த கண்காட்சியின் போது இடம்பெற்றுள்ளது. கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினராக கண்டாவளை பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் கலந்து கொண்டிருந்தார்.
அத்துடன் இதில் கிராம அலுவலர் மற்றும் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.