250 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அமித்ஷா கூறும் போது பிரதமர் மோடி மவுனமாக இருப்பது ஏன்? என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கேள்வி எழுப்பி உள்ளார்.
காஷ்மீர் மாநிலம் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் முகாம்களை அழித்தது.
இந்த தாக்குதலில் 350 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் மத்திய அரசு தொடர்ந்து இது குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் பா.ஜனதா அரசுக்கு கேள்வி எழுப்பி இருந்தனர்.
இதற்கிடையே இந்திய விமானப்படை தாக்குதலில் 250-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் 250 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அமித்ஷா கூறும் போது பிரதமர் மோடி மவுனமாக இருப்பது ஏன்? என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:-
இந்திய விமான படை பாகிஸ்தானில் நடத்திய தாக்குதலில் 250 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பா.ஜனதா தலைவர் அமித்ஷா கஷ்டத்துடன் தெரிவித்துள்ளார். ஆனால் அவரது குருவான பிரதமர் மோடி எப்போதும் மவுனமாக இருக்கிறார். பயங்கரவாதிகள் கொல்லப்பட்டால் நல்ல செய்திதான். ஆனால் பிரதமர் மோடி மவுனமாக இருப்பதன் ரகசியம் என்ன?
இவ்வாறு மாயாவதி கூறியுள்ளார்.