மும்பையில் வசிக்கும் பிரபல இந்திப்பாடகர் என்று பொய் சொல்லி ஃபேஸ்புக்கிலும், வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைத்தளங்களில் பல பெண்களுடன் பழகி அவர்களிடமிருந்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக ஒரு உளுந்தூர்பேட்டை ஆசாமியை லபக்கி இருக்கிறது போலிஸ்.
உளுந்தூர்பேட்டையில் வசிக்கும் கிருஷ்ணன் என்பவரது மகன் மகேந்திர வர்மன்.இவர் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்-அப்பில் தன்னை பிரபல இந்திப்பாடகர் அர்மான் மாலிக் என்று கூறிக்கொண்டு பல பெண்களுடன் பழகி வந்திருக்கிறார்.அந்தப் பெண்களில் பலரை காதல் வலையில் வீழ்த்தி அவர்களது அந்தரங்கமான புகைப்படங்களை வாங்கி இருக்கிறார்.
படங்கள் கைக்கு வந்த பிறகு அவற்றை வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று அந்தப் பெண்களை மிரட்டி அவர்களிடமிருந்து ஏராளமான பணம் மற்றும் நகையைப் பறித்திருக்கிறார்.இப்படி இவரிடம் ஏமாந்த கோவைப் பெண் ஒருவர் இதுபற்றி,கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்திருக்கிறார்.
இதையடுத்து,போலீஸார் கொடுத்த ஐடியாவின்படி அந்தப் பெண் மகேந்திர வர்மனிடம் நைசாகப் பேசி அவரை கோவைக்கு வரவழைத்தார்.அவரை கோவை போலீஸார் குண்டுக்கட்டாகத் தூக்கிக் கொண்டுபோய் விசாரித்ததில் மகேந்திர வர்மன் இதுவரை 15 பெண்களை ஏமாற்றி இருப்பது தெரிய வந்திருக்கிறது!
போலீஸார் மேலும் ‘தீவிரமாக’ விசாரித்து வருகிறார்கள்.