காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் இன்று காலை வவுனியா புகையிரத நிலைய வீதியிலுள்ள முதிரைத் தோட்டம் தேடி வந்த பிள்ளையார் ஆலயத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காகவும், தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டியும், சுதந்திரமான வாழ்வு பெறவேண்டியும் மகா யாக வேள்வியும் ஆன்மீக பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர். சிவஸ்ரீ முத்து ஜெயந்திநாதக்குருக்கள் தலைமையில் யாகம் இடம்பெற்றது.
தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கலந்துகொண்டு பிரார்த்தனை, கூட்டு வழிபாடு மகா யாக வேள்வி, ஆன்மீகப்பிரார்த்தனையில் ஈடுபட்டனர். தமது உறவுகளை நினைத்தும் நிரந்தரத்தீர்வு கிடைக்க வலியுறுத்தியும் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்வில் அருளுரையினை கொழும்பு, ஆன்மீக அருள் ஜோதி சர்வதேச இந்து குரு பீடாதிபதி ஸ்கந்தசாபசிவ சரவணபவ ஜயப்பதாசக் குருக்கள் ஆற்றியதுடன் அந்தணர்களும் சிவாச்சாரியார்களும் கலந்து கொண்டனர்.
பின்னர் ஆலயத்திலிருந்து ஊர்வலமாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தமது போராட்ட இடத்திற்கு சென்றடைந்தனர்.