ஜப்பானில் எதிர்வரும் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள், கோடைகால பரா ஒலிம்பிக் போட்டிகளுக்கான விளையாட்டு அரங்குகளின் நிர்மாணப் பணிகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், சமீபத்திய போட்டிகளின்போது, பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மைதானங்களுக்கு பிளாஸ்டிக் போத்தல்களில் தண்ணீர் உள்ளிட்ட எந்த திரவப்பொருளும் எடுத்துச் செல்லக்கூடாது என பார்வையாளர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டள்ளது.
இதேவேளை, ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெறும்போது ஜப்பானில் வெயிலின் தாக்கம் மிக கடுமையாக இருக்கும். இதனால் மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான நடைமுறைகளை போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் செய்து வருகின்றனர்.
அரசின் பெருமளவான நிதியினால் கடந்த இரண்டு வருடங்களாக உருவாக்கப்பட்டு வரும் பிரமாண்ட விளையாட்டு அரங்குகளின் 60 சதவீதமான பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அரங்கங்கள் பெரும்பாலும் எதிர்வரும் நவம்பர் மாதத்துக்கு முன்னதாக, முழுமையாக பூர்த்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறித்த கோடைக்கால ஒலிம்பிக் தொடரில், வெப்பத்தை கட்டுப்படுத்தும் வகையில் அரங்கத்தின் கூரைகள் மரத்தில் வடிவமைக்கப்பட்டு வருகின்றது. இதன் மூலம் பார்வையாளர்கள் மற்றும் வீரர்களை குளிர்சியாக வைத்திருக்க முடியுமென வடிவமைப்பாளர்கள் நம்புகின்றனர்.
குறித்த கோடைக்கால ஒலிப்பிக் தொடரில், பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, முகத்தின் மூலம் ஒருவரை அடையாளம் காணும் முறைமையை போட்டி அமைப்பாளர்கள் அறிமுகப்படுத்தவுள்ளனர்.
கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள், எதிர்வரும், 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24ஆம் திகதி முதல் ஒகஸ்ட் மாதம் 9ஆம் திகதி வரை, ஜப்பானின் டோக்கியோவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
206 நாடுகள் பங்கேற்கும் இத்தொடரில், 33 விளையாட்டுகளில் இருந்து 339 விiளாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த தொடரில் 11,091 போட்டியாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்தோடு, இந்த ஒலிம்பிக் போட்டிகளில், அண்மையில் வெளிவந்த தகவலின்படி, பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், கோடைக்கால ஒலிம்பிக் தொடரில், 7 புதிய விளையாட்டுக்கள் அறிமுகப்படுத்தவுள்ளன. இதனை சர்வதேச ஒலிம்பிக் குழுவும் உறுதிப்படுத்தியுள்ளது.
அதேபோல, கோடைகால பரா ஒலிம்பிக் போட்டிகள், எதிர்வரும் 2020ஆம் ஆண்டு, ஒகஸ்ட் மாதம் 25ஆம் திகதி முதல் எதிர்வரும் செப்டம்பர் 6ஆம் திகதி வரை டோக்கியோவில் நடைபெறவுள்ளது
டோக்கியோவில் உள்ள புதிய தேசிய விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள இந்த போட்டித் தொடரில், 22 விளையாட்டுக்களில் 540 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன.