முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு பாண்டியன்குளம் பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசாவின் ஊடக சந்திப்பு நேற்று மாலை இடம்பெற்றது.
இதன்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டமை குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “யுத்தத்தின்போதும் யுத்தத்தின் பின்னரும் மக்களுடன் இணைந்து வாழ்பவள் எனும் முறையில் கூறுகின்றேன், கோட்டாபய ராஜபக்ஷவை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
அவர்களுடைய ஆட்சியை அசுர ஆட்சி என்றே பார்க்கின்றோம். வெள்ளை வான் கடத்தல், பிள்ளைகளை கடத்தல் போன்ற அநாகரிகமான செயற்பாடுகள் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் ராஜபக்ஷ குடும்பத்தினரே அரங்கேற்றியிருந்தனர்.
எனவே அவர்கள் யாரை நியமித்தாலும் கோட்டாபய ராஜபக்ஷவை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என மேலும் தெரிவித்துள்ளார்.