இத்தாலி செல்ல முயற்சித்த இலங்கை பெண் ஒருவர் நாடு கடத்தப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒஸ்ரியா ஊடாக இத்தாலி செல்ல முயற்சித்தமையை குறித்த பெண் ஒப்புக்கொண்டமையினால் மினுவங்கொடை நீதிமன்றம் ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
தொடுவாவே பிரதேசத்தை சேர்ந்த பெண்ணுக்கே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இத்தாலி நாட்டு போலி கடவுச்சீட்டு உட்பட விமான டிக்கட்களை பயன்படுத்தி சந்தேக நபரான பெண் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக ஒஸ்ரியா சென்றுள்ளார். அங்கிருந்து இத்தாலி செல்ல முயற்சித்துள்ளார்.
எனினும் ஒஸ்ரியா விமான நிலையத்தில் அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். நாடு கடத்தப்பட்டவர் இலங்கை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
எனினும் அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் அவர் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார். அதன் பின்னர் குறித்த பெண்ணுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.