பிணை நிபந்தனைகளை மீறினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகரவை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சிலாபம் மேல் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
2004 ஆம் ஆண்டு அனுமதியின்றி இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கைத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்தமை தொடர்பில் அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்திற்கு அவருக்கு பிணை வழங்கப்பட்டிருந்த போதிலும் அதில் ஒரு பிணை நிபந்தனையாக ஒவ்வொரு ஞாயிறும் காலை 9 மணி முதல் 12 மணிக்கு உட்பட்ட நேரத்தில் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.
பின்னர் பிரதிவாதிகளின் தரப்பினால் 2018.05.15 ஆம் திகதி மேல் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய குறித்த பிணை நிபந்தனையை மாதாந்தம் இறுதி ஞாயிறு மாத்திரம் பொலிஸில் ஆஜராகுமாறு தளர்த்தியிருந்தது.
குறித்த வழக்கு தொடர்பில் மேல்நீதிமன்றம் பொலிஸாரிடம் அறிக்கை ஒன்றை கோரியிருந்த சந்தர்ப்பத்தில் சந்தேக நபர் சில தினங்களில் பிணை நிபந்தனையை மீறியுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்த வழக்கு விசாரணை இன்று வியாழக்கிழமை (10) மீள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, பிணை நிபந்தனைகளை மீறினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகரவை விளக்கமறியலில் வைக்குமாறு சிலாபம் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.