Loading...
நவம்பர் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் குறித்து ஈ.பி.டி.பி யின் 16 அம்ச தீர்மானங்கள் இன்று வௌியிடப்பட்டன.
அவை பின்வருமாறு,
Loading...
- மாகாணசபை முறைமையை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் இருந்து தொடங்கி அதை மேலும் பலப்படுத்தி எமது அரசியல் இலக்குநோக்கி முன்னேறிச் செல்வோம்.
- இரு மொழிக் கொள்கையினை உரிய வகையில் நடைமுறைப்படுத்தக் கோருவோம்.
- எஞ்சிய தமிழ் அரசியல் கைதிகளை விரைவாக விடுதலை செய்விப்போம்.
- சகல முன்னாள் போராளிகளுக்கும் வாழ்வாதார வசதிகளையும் நிரந்தர தொழில் வாய்ப்பையும் உருவாக்கிக் கொடுப்போம்.
- எமது நிலம் எமது மக்களுக்கே சொந்தம். இந்த உறுதிமிக்க கொள்கை வழி நின்று எஞ்சிய எமது மக்களின் நிலங்களையும் மீட்டுக்கொடுப்போம்.
- காணமற்போன உறவுகளைத்தேடும் மக்களின் கண்ணீருக்கு பரிகாரம் பெற்றுக் கொடுப்போம்.
- எமது தேசத்தை தூக்கி நிறுத்தும் அபிவிருத்தி பணிகளை நாம் விட்ட குறையிலிருந்து மறுபடி தொடருவோம்.
- முதல் கட்டமாக வேலையற்ற தமிழ் இளைஞர் யுவதிகளில் ஒரு இலட்சம் பேர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொடுப்போம். யுத்தம் காரணமாக உரிய கல்வித்தகமையை இழந்து நிற்கும் தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு தற்காலிக வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுப்பதோடு கால அவசியத்தின் அடிப்படையில் அதற்கான கல்வித் தகமையை பெற்றிடவும், தொழில் அனுபவங்களின் அடிப்படையில் நிரந்தர வேலைவாய்ப்பையும் பெற்றிட நடவடிக்கை எடுப்போம்.
- வீடற்ற மக்களுக்கு வீடு, நிலமற்ற மக்களுக்கு நிலம். மீள்குடியேறிய மக்களுக்கு நிரந்தர வாழ்வியல் உரிமையினைப் பெற்றுக்கொடுப்போம்.
- இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் நடைபெறும் இன மத ரீதியிலான சகல திணிப்பு நடவடிக்கைகளையும் முடிவுக்குக் கொண்டுவருவோம்.
- பொலிஸ் சேவைகளிலும், முப்படைகளிலும் உள்ள பதவிகளுக்கு இன வீதாசார அடிப்படையில் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுப்போம்.
- நுண்கடன் காரணமாக பாரிய பாதிப்புக்களுக்கு உட்பட்டுள்ள மக்களை அந்தப் பாதிப்புக்களில் இருந்து மீட்டு எடுப்பதற்கான உரிய பொறிமுறைகளை உருவாக்குவோம்.
- யுத்தம் காரணமாக கணவன்மாரை இழந்த பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு பொருளாதாரப் பலத்தினையும், சமூக பாதுகாப்பினையும் வழங்கக் கூடிய உரிய வேலைத் திட்டம் ஒன்றை உருவாக்கிக் கொடுப்போம். விஷேட தேவை உள்ளவர்களுக்கு சமூகத்தில் சமனானவர்கள் என்பதை உறுதிப்படுத்த விஷேட திட்டங்களை உருவாக்குவோம்.
- கடற்தொழில், விவசாயம், பனந்தொழில் மற்றும் சகல தொழிற்துறைகளையும் ஊக்குவித்து எமது மக்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்தை வினைத்திறனுடன் முன்னெடுப்போம்.
- முள்ளிவாய்க்கால் வரை கொல்லப்பட்ட சகல மனித உயிர்களுக்கும் மரியாதை செலுத்தும் வகையிலும், மதவழிபாடுகளை மேற்கொள்ளும் வகையிலும் பொதுச் சதுக்கத்தையும் அதற்கான நினைவு நாளையும் உருவாக்குவோம்.
- முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் நாம் கொண்டிருந்த தேசிய நல்லிணக்க உறவையும் அதன் ஊடாக எமது மக்களுக்கு நாம் ஆற்றிய பணிகளின் போது அவர்களுடன் எமக்கு ஏற்பட்ட பரீட்சயத்தையும் அனுபவங்களையும் வைத்து எமது மக்களுக்கான பணிகளை விட்ட குறையிலிருந்து தொடருவோம் என்ற நம்பிக்கையில் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் வெற்றியில் நாமும் பங்கெடுக்க தொடர்ந்தும் உழைப்போம் என்றும் அந்த வெற்றியை தமிழ் மக்களின் வெற்றியாக மாற்றியமைக்க எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் சிந்தனை வழிநின்று உறுதியுடன் உழைப்போம் என்றும் நாம் தீர்மானம் எடுக்கின்றோம்.
கடந்த காலங்களில் எமது ஆற்றலாலும், அனுபவத்தாலும், ஆளுமையாலும் எமது தேசிய நல்லிணக்க உறவினாலும் பாரிய மக்கள் பணியினை வெற்றியுடன் முன்னெடுத்த நாம் மேற்கூறிய எமது கட்சியின் தீர்மானங்களை நாம் விரைவாக நிறைவேற்ற உறுதிகொண்டு உழைப்போம் எனவும் ஜனாதிபதி தேர்தல் குறித்து ஈ.பி.டி.பி யின் தீர்மானங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...