தமிழகத்தில் தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவர்கள் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் சிக்கியுள்ளது.
சென்னை ஓட்டேரியை சேர்ந்தவர் சந்திரன் (64). இவருடைய மனைவி விஜயலட்சுமி (60). இவர்களுக்கு அரிபிரசாத் என்ற மகனும், ராதிகா என்ற மகளும் உள்ளனர்.
இருவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். சந்திரன் மற்றும் விஜயலட்சுமி மட்டும் இந்த வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.
நேற்று மதியம் இவர்களது வீட்டில் வேலை செய்யும் சித்ரா என்பவர் சந்திரன் வீட்டுக்கு வந்தார். கதவு திறந்தே கிடந்தது. வீட்டின் உள்ளே சென்ற சித்ரா, படுக்கை அறையில் ஒரே நைலான் கயிற்றால் சந்திரன், அவருடைய மனைவி விஜயலட்சுமி இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து தூக்கில் தொங்கிய கணவன்-மனைவி உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த விசாரணையில் முதலில் மயிலாப்பூரில் சொந்த வீட்டில் வசித்த சந்திரன், பங்கு சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டு வசதியாக வாழ்ந்து வந்தார்.
ஆனால் திடீரென ஏற்பட்ட கடன் சுமையால், சொந்த வீட்டை கடனாளிகளிடம் கொடுத்துவிட்டு கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு ஓட்டேரியில் உள்ள வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார். கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த அவர், இந்த தற்கொலை முடிவை எடுத்தது தெரியவந்தது.
முன்னதாக அவரது வீட்டில் சோதனை செய்தபோது, சந்திரன் தனது மகன், மகள் மற்றும் பொலிசாருக்கு தனித்தனியாக கைப்பட எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.
அதில், நான் வாங்கிய கடனுக்கு வட்டியாக மட்டுமே மாதா மாதம் ரூ.1 லட்சத்துக்கும் அதிகமாக கொடுத்து வந்தேன்.
தொடர்ந்து வட்டியும், அசலையும் கொடுக்க முடியாத விரக்தியில் நாங்கள் தற்கொலை செய்து கொள்கிறோம்.
எங்களுக்கு கடன் கொடுத்தவர்கள், எங்கள் மகன் மற்றும் மகளிடம் பணம் கேட்டு தொல்லை கொடுக்க வேண்டாம் என எழுதப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக தொடர்ந்து பொலிசார் விசாரித்து வருகின்றனர்.