தமிழீழத் தேசிய மாவீரர் நாளையொட்டி பரிசின் தமிழர் வர்த்தக மையமான லாச்சப்பல் பகுதி, மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டதோடு, மாவீரர்களை நினைவேந்தி வர்த்தக நிலையங்கள் சிலவும் மூடியிருந்தன.
விடுதலைப்புலிகளின் தலைவர் அவர்களது பிறந்த நாளையொட்டி நேற்று செவ்வாய்கிழமை லாச்சப்பலில் பல நிகழ்வுகள் எழுச்சியுடன் நடைபெற்றிருந்த நிலையில், கலகம் அடக்கும் காவல்துறையினரும் தமது ரோந்து நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.
இன்று காலையும், 11 மணியளவில் Rue Louis balnc பகுதியில் வாகனங்களை நிறுத்தியிருந்த கலகம் அடக்கும் காவல்துறையினர் தமது ரோந்து நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.
உணவகங்கள், சலூன்கள் என பல வர்த்தக நிலையங்களில் தமிழீழ விடுதலைக்கானங்கள் ஒலித்துக் கொண்டிருந்ததோடு, வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் பலரும் சுழற்சி முறையில் மாவீரர் நாள் மண்டபத்துக்கு சென்று, மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தி திரும்பியிருந்தனர்.
இதேவேளை,Rue Philipe Gérard பகுதியில் அமைந்திருக்கம் சிங்கள அங்காடியில் காலையில் இருந்து மாலை 4 மணிவரை தமது வாடிக்கையாளர்கள் எவரும் வரிவில்லை என அங்காடியின் பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மாவீரர் நாள் என்ற வகையில் தமிழ் மக்களின் உணர்வலைகளின் காரணமாகவே, அவர்கள் இப்பகுதிக்கு இன்றைய நாளில் வருவதனை தவிர்த்திருந்தனர் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.