சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரிக்கு தொழில்நுட்ப கல்வி திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய விசேட கடமைக்கு வந்திருந்த பரீட்சை மேற்பார்வையாளர் குழு மீது பரீட்சார்த்தி மாணவர்கள் ஒரு தொகையினர் சரமாரியாக தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்றார்கள்.
இன்று (29) மதியம் இந்த பரபரப்பு சம்பவம் நடந்தது.
மேற்பார்வையாளர், உதவி மேற்பார்வையாளர்கள் இருவர் தாக்குதலில் பலத்த காயங்களுக்கு உள்ளாகி சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
கல்லூரியின் கல்வியாண்டு 2019 இற்கு உரிய மட்டம் – 05, 06 ஐ சேர்ந்த விவசாய டிப்பிளோமா மாணவர்களுக்கு இறுதி தவணை பரீட்சைகள் இடம்பெற்று வருகின்றன.
மேற்பார்வையாளர் மட்டக்களப்பு தொழில்நுட்ப கல்லூரியை சேர்ந்த விரிவுரையாளர் ஆவார். இவருக்கு தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இவரை சத்திர சிகிச்சைக்கு உட்படுத்த நேர்ந்தது.
மட்டக்களப்பு தொழில்நுட்ப கல்லூரியை சேர்ந்த மற்றொரு விரிவுரையாளரான உதவி மேற்பார்வையாளருக்கு தலையிலும், அக்கரைப்பற்று தொழில்நுட்ப கல்லூரியை சேர்ந்த விரிவுரையாளரான உதவி மேற்பார்வையாளருக்கு கையிலும் காயங்கள் ஏற்பட்டு உள்ளன.
கல்லூரியில் பதற்றமும், பாதுகாப்பற்ற சூழலும் ஏற்பட்டதை தொடர்ந்து சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொலிஸார் அழைக்கப்பட்டு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டார்கள்.
பொலிஸார் வைத்தியசாலைக்கு வந்து மூவரின் வாக்குமூலங்களை பதிவு செய்கின்ற நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் மேற்பார்வை கடமையில் ஈடுபட முடியாது இருப்பதாக தொழில்நுட்ப கல்வி திணைக்களத்துக்கு மேற்பார்வையாளர் குழு அறிவித்துள்ளது.