நம் கண்களின் கண் இமை திடீரென்று இழுப்பு வந்ததுபோல் துடிக்கும். இப்படி அனுபவம் உங்களுக்கு வந்ததுண்டா?
கண்ணின் மேலிமை அல்லது கீழிமை இந்த மாதிரி துடிக்கும். இந்தத் துடிப்பு சில நொடிகள் மாத்திரமே நீடிக்கும் அது பிரச்சினை இல்லை. ஆனால் நாள் கணக்கில் அதைவிட அதிகமாக சில பேருக்கு துடிக்கும். இதை இடக்கண் துடித்தால் நல்லது; வலக்கண் துடித்தால் ஏதாவது கெட்ட சகுனம் ஏற்படும் என்று சில பேர் கூறுவதை கேட்டிருக்கிறோம்.
இமை இப்படி துடிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் ஏதாவது பிரச்சினை உள்ளதா என்று சில பேருக்கு கேள்வி எழும்பும்.
அதை பற்றி விரிவாக இங்கு பார்ப்போம்:
இடக்கண்ணோ, வலக்கண்ணோ இமை துடிப்பு என்பது எரிச்சலூட்டக்கூடியதாக இருந்தாலும் அது ஆபத்து அல்ல.
மன அழுத்தம், அதிக அளவு காஃபைன் சேர்த்தல், தூக்கம் கெடுதல் அல்லது போதுமான தூக்கமின்மை, கண் வறட்சி ஆகியவை காரணங்களால் இமையில் இழுப்பு வந்ததைப்போல் துடிக்கும். இதுதான் இமைகள் துடிக்க காரணம்.
மது அருந்துதல், பிரகாசமான விளக்கு வெளிச்சம், கண் பரப்பு மற்றும் இமையின் உள்பக்கம் உறுத்தல், அதிக உடலுழைப்பு, புகை பிடித்தல், காற்று, தலைசுற்றுவது போன்ற உணர்வு, மருந்துகள் சாப்பிடுதல் ஆகியவைகளாலும் கண்ணிமைகள் துடிக்க ஆரம்பிக்கும்.
மேற்சொன்ன அனைத்தும் அதிகப்படுத்தும்போது தலை வலி இல்லாமலே இமை துடிக்க ஆரம்பித்துவிடும். இது ஆபத்தானதும் அல்ல. கொஞ்ச நாள் கழித்து சிகிச்சை இல்லாமலேயே தானாகவே இது நின்று விடும்.
இமையில் துடிப்பு ஏற்படுவதற்கான காரணங்களை கண்டுபிடித்து அவற்றை தவிர்ப்பதன் மூலம் இமை துடிப்பை தடுக்கலாம்.
இமை துடிப்பை தடுக்கக்கூடிய சில வாழ்க்கை முறைகளை பார்ப்போம்:
தேநீர் மற்றும் காஃபி போன்ற காஃபைன் சேர்ந்த பானங்களை குடிப்பதை கொஞ்ச கொஞ்சமாக நிறுத்த வேண்டும். காஃபைன் கலந்த சாக்லேட் சாப்பிடுவதை குறைக்க வேண்டும்.
தேநீர், காபி, சாக்லேட் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் கழித்து கண்ணிமை துடிக்கிறதா என்று பாருங்கள்.
உங்கள் கண்ணிமை துடிப்பதற்கு மதுபானம் அருந்துவது காரணமாக இருக்கும். ஆகவே, குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
தினமும் இரவு ஏழு முதல் எட்டு மணி நேரம் ஆழ்ந்த உறக்கம் வேண்டும். படுக்கைக்குச் செல்லும் முன்னர் தொலைக்காட்சி மற்றும் மொபைல் போன் பார்ப்பதை தவிர்த்து விட வேண்டும்.
பெரியவர்களுக்கு, குறிப்பாக ஐம்பது வயதை எட்டியவர்களுக்கு கண்கள் வறட்சியடைய ஆரம்பிக்கும். கணினி திரையை அதிக நேரம் பார்ப்பது, குறிப்பிட்ட மருந்துகள் சாப்பிடுவது, கான்டாக்ட் லென்ஸ் அணிவது ஆகியவை கண்கள் வறட்சிக்கு காரணமாக அமைகின்றன. இவற்றையெல்லாம் தவிர்ப்பது நல்லது.
உடலில் நீர்ச்சத்து குறைவதால்கூட கண்ணிமை துடிக்கும். இதை தவிர்க்க முடிந்த அளவு அதிக நீர் குடிக்க வேண்டும்.
கண் பயிற்சிகள்
கண்களை மூடிக்கொண்டு குளிர்ந்த மற்றும் வெதுவெதுப்பான நீரை மாறி, மாறி இமைகள் மேல் அடிக்கலாம். இந்த முறை ஹைட்ரோதெரபி என்று சொல்லப்படுகிறது. தண்ணீரை தெளிக்கும்போது கண்களில் உள்ள இரத்தநாளங்கள் சுருங்கும்; வெதுவெதுப்பான நீர் படும்போது இரத்தநாளங்கள் விரிவடையும். அதன்மூலம் கண்களில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இந்த பயிற்சி செய்தால் இமை துடிப்பதை தடுக்க முடியும்.
கையின் நடுவிரலை இமைகள்மேல் பதித்து, விரலை வட்டவடிவமாக சுழற்றி (circular motion) அரை நிமிட நேரம் மசாஜ் செய்யலாம். இது இமைகளில் இரத்த ஓட்டத்தை தூண்டி, கண் தசைகளை வலுவாக்கும். இப்பயிற்சி செய்தால் இமை துடிப்பு நிற்கும்.
முடிந்த அளவு இறுக்கமாக கண்களை மூடி, பிறகு முடிந்த அளவு விரிவாக திறக்கலாம். கண்ணீர் வருமளவுக்கு தொடர்ந்து இப்படி செய்தால், இது கண்கள் மற்றும் முகத்தின் தசைகள் விரிவடையச் செய்யும். கண்களுக்கு நீர்ச்சத்து சற்று கிடைக்கும். இதனால் இரத்த ஓட்டம் அதிகரித்து, இமைகளுக்கு ஓய்வு கொடுக்கும். இப்படி செய்தால் கண்ணிமை துடிப்பு தடுக்கலாம்.