அந்தமான் பகுதியில் உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி அதிதீவிர புயலாகவே மாற வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு நிலைய பணிப்பாளர் என்.புவியரசன் தெரிவித்துள்ளார்.
இப்புயல் வங்காளதேசம் அல்லது ஆந்திரா பகுதிகளில் கரையை கடக்கக்கூடுமென கணிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த புயலால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும், ஆனால் தமிழகத்தை நோக்கி வந்தால் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
இதில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.
இதுதவிர தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை அண்டிய அந்தமான் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகியுள்ளது. இது வரும் 15 ஆம் திகதி (நாளை) மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும். அதன்பின்னர் 16 ஆம் திகதி (நாளை மறுதினம்) புயலாக வலுப்பெறக்கூடும்.
இதன் காரணமாக தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நாளை 45 கி.மீ முதல் 65 கி.மீ வரை வேகத்திலும், நாளை மறுதினம் 55 கி.மீ முதல் 75 கி.மீ வேகத்திலும், 17ஆம் திகதி(ஞாயிற்றுக்கிழமை) 65 கி.மீ முதல் 85 கி.மீ வேகத்திலும் காற்று வீசக்கூடும். இதனால் மீனவர்களை இப்பகுதிகளில் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.