டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்யும் வணிகர்கள், நுகர்வோர்களை ஊக்குவிக்கும் விதமாக ஏப்ரல் 14-ம் திகதி ரூ.1 கோடி பரிசு அறிவிக்கப்படும் என நிதி ஆயோக் தலைமைச் செயலதிகாரி அமிதாப் காந்த் அறிவித்துள்ளார்.
புழக்கத்தில் இருந்த பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு கடந்த மாதம் 8-ஆம் திகதி அறிவித்தது.
அதையடுத்து, ரொக்கமில்லா பணப்பரிவர்த்தனைகளைக் குறைத்து, கிரெடிட், டெபிட் கார்டு (டிஜிட்டல்) பணப்பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்கு மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.
அதன்படி மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்கிவிக்க நுகர்வோர்களுக்கு “லக்கி கிரஹக் யோஜனா திட்டம்” மற்றும் வணிகர்களுக்கு “டிஜி தன் வியாபார் யோஜனா” திட்டம் ஆகிய ஆகிய பரிசளிப்புத் திட்டங்களை நிதி ஆயோக் தலைமைச் செயலதிகாரி அமிதாப் காந்த் அறிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் ரூ.340 கோடிக்கு பரிசுத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நிதி ஆயோக் தலைமைச் செயலதிகாரி அமிதாப் காந்த் கூறுகையில், லக்கி கிரஹக் யோஜனா திட்டத்தின் கீழ், வரும் கிறிஸ்துமஸ் முதல் 2017 ஏப்ரல் 14-ம் திகதி வரை தினமும் 15 ஆயிரம் பேருக்கு தலா ரூ.1000 பரிசு வழங்கப்பட உள்ளது.
மேலும், வாரந்தோறும் 7 ஆயிரம் பேருக்கு பரிசு வழங்கப்பட உள்ளது. அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை பரிசு வழங்கப்படும். பின்னர் 2017 ஏப்ரல் 14-ம் தேதி மெகா பரிசு அறிவிக்கப்படும்.
முதல் பரிசாக ரூ.1 கோடியும், இரண்டாம் பரிசாக ரூ.50 லட்சமும், 3வது பரிசாக ரூ.25 லட்சமும் அறிவிக்கப்படும்.
டிஜி தன் வியாபார் யோஜனா திட்டத்தின் கீழ், கிறிஸ்துமஸ் முதல் 2017 ஏப்ரல் 14 வரை வாரந்தோறும் 7 ஆயிரம் வணிகர்களுக்கு பரிசு வழங்கப்படவுள்ளது.
அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கப்படும். ஏப்ரல் 14-ம் திகதிக்கு நுகர்வோர் மற்றும் வணிகர்களுக்கு மெகா பரிசு வழங்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் இந்த இரண்டு திட்டங்களும் ரூ.50 முதல் ரூ.3,000 வரையிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
“பாயிண்ட் ஆஃப் சேல்’ எனப்படும் ஸ்வைப்பிங் இயந்திரங்கள் மூலம் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வியாபாரிகளும் போட்டிக்குத் தகுதியானவர்கள் ஆவர். ரூபே, யுஎஸ்எஸ்டி, ஏஇபிஎஸ், யுபிஐ போன்ற அனைத்து வகையான மின்னணு பரிவர்த்தனைகளும் இந்த போட்டிக்குத் தகுதியானவை என அவர் கூறியுள்ளார்.