உலகளவில் கொரோனா வைரஸ் பரவியதற்கு சீனாதான் காரணம் என்று அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் கொரோனா வைரஸ் எப்போது கண்டறியப்பட்டது, மனிதர்கள் மூலம் மனிதர்களுக்கு எப்போது பரவும் என்பது குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட்டு சீனா விளக்கம் அளித்துள்ளது.
இந்த வெள்ளைஅறிக்கையை சீன அரசு வெளியிட்டு ,உலக நாடுகள் தங்கள் மீது சுமத்தும் குற்றச்சாட்டுக்கு நீண்ட விளக்கத்தையும் பதிலையும் அளித்துள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது,
“கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளி கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் 27-ம் திகதி வுஹான் மருத்துவமனை ஒன்றில் கண்டறியப்பட்டார். அதன்பின் அந்த மருத்துவமனையின் மருத்துவர்கள் மருத்துவ வல்லுநர்களுக்கு தகவல் தெரிவித்து அந்த நோயாளியின் உடல்நிலை மற்றும் தாக்கம் குறித்துஆய்வு செய்து தொற்று குறித்த ஆய்வை மேற்கொள்ளுமாறும், ஆய்வுக்கூட சோதனையை தொடங்குமாறும் கேட்டுக்கொண்டார்கள்
ஆனால், முதல்கட்டமாக அந்த நோயாளிக்கு ஏற்பட்ட தொற்றைப் பார்த்து வைரஸ் நிமோனியா என்றுதான் கணி்த்தார்கள். அதன்பின் தேசிய சுகாதார ஆணையம்(என்ஹெச்சி) மூலம் மருத்துவ வல்லுநர்கள் அந்த நோயாளியையும், வைரஸையும் ஆய்வு செய்து இது மனிதர்களுக்கு இடையே மனிதர்கள் மூலம் பரவக்கூடிய வைரஸ் என்று 2020, ஜனவரி 19-ம் திகதி அறிவித்தார்கள்.
உலக மருத்துவ வல்லுநர்கள் கொரோனா குறித்து அறிவிக்கும் ஒரு மாதத்துக்குமுன்புதான் சீன மருத்துவ வல்லுநர்கள் கொரோனா குறித்து அறிந்தார்கள்.
ஜனவரி 19-ம் திகதிக்கு முன்பாக, இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவுமா என்பது குறித்த போதுமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்று சீனாவின் புகழ்பெற்ற நுரையீரல் வல்லுநர் வாங் குவாங்பா தெரிவித்துள்ளார்
நுரையீரல் வல்லுநர் வாங் குவாங்பா கூறுகையில் “ மருத்துவ வல்லுநர்கள் குழு வுஹான் நகரத்துக்கு ஜனவரி மாதம் சென்றபோது ஏராளமானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார்கள், ஆனால், எவ்வாறு பரவியது, ஹூனன் சந்தையிலிருந்து காய்ச்சல் பரவியதா என்பது குறித்த ஆதாரங்கள் கிடைக்கவில்லை.
அதுமட்டுமல்லாமல் வவ்வால்கள், எறும்புதின்னிகள் மூலம் மனிதர்களுக்கு பரவியதாக நம்பப்பட்டாலும் அதற்கான ஆதாரம் இல்லை.
ஆய்வுகள் மூலமே இதை அறிய முடியும், மனிதர்கள் மூலம் மனிதர்களுக்கு பரவக்கூடிய தன்மையுள்ளதா எனக்கண்டறிய முடியும் என நம்பினோம்.
இதையடுத்து, இறுதியற்ற சூழல் நிலவியதால், கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட வுஹான் நகரம், ஹூபே மாநிலமே ஜனவரி 14-ம் திகதி தயாராகியது” எனத் தெரிவித்தார்
சீனாவின் மற்றொரு நுரையீரல் வல்லுநர் ஹாங் நான்ஷன் கூறுகையில் “ குவாங்டாங் நகரில் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஜனவரி 20-ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டது
அப்போதுதான் மனிதர்கள் மூலம் மனிதர்களுக்கு பரவம் என்பதை உறுதி செய்தோம்”எனத் தெரிவித்தார்
சீனாவின் நோய்தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அமைப்பின் இயக்குநர் குவா யூ கூறுகையில் “ மனிதர்கள் மூலம் மனிதர்களுக்கு கொரோனா பரவும் என்பதை கடந்த ஜனவரி 19-ம் திகதிதான் கண்டறிந்து உறுதி செய்தோம். உடனடியாக வூஹான், ஹூபே மாநிலம் முழுவதும் தொற்று நோய் குறித்த விசாரணை, சிகிச்சையைத் தொடங்கி விரைவு படுத்தினோம்.
அதன்பின் சிறிதுகூட தாமதிக்காமல் உலக சுகாதார அமைப்பு, அமெரிக்கா உள்ளிட்ட மற்ற நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் குறித்த அறிவிப்பை தெரிவித்து அது பெருந்தொற்றாக மாறலாம் என எச்சரித்தோம்.
வுஹான் மாநிலத்தில் சமூகப்பரவல் நடந்து, அது பல்வேறு நகரங்களுக்கும் வைரஸ் பரவியது. அதன்பின் தேசிய அளவில் வைரஸைக் கட்டுப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது “ எனத் தெரிவித்தார்.