தமிழகத்தில் உள்ள மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளியை பிளாஸ்மா சிகிச்சையை பயன்படுத்தி குணமாக்கியுள்ளனர்.
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் தீவிரமாக போராடி வருகின்றன. எனினும், ஹைட்ராக்ஸி குளோரோகுயின், ரெம்டிசிவர் போன்ற மாத்திரைகளை சோதனை அடிப்படையில் மருந்துவர்கள் பரிந்துரைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், பிளாஸ்மா தெரபி எனப்படும் குருதி நீர் சிகிச்சையும் சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி, கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்த நபர்களின் ரத்தத்திலிருந்து நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த பிளாஸ்மா பிரித்தெடுக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் உடலில் செலுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதையடுத்து, கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு பிளாஸ்மா சிகிச்சை முறையை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரை செய்தது.
அதன் தொடர்ச்சியாக பல்வேறு மாநிலங்கள் பிளாஸ்மா சிகிச்சையை பயன்படுத்த தொடங்கியுள்ளன. பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்ட பல்வேறு நபர்கள் குணமடைந்தும் வருகின்றனர்.
தற்போது, மதுரையில் முதன்முறையாக கொரோனாவுக்கு மேற்கொள்ளப்பட்ட பிளாஸ்மா சோதனை வெற்றியடைந்துள்ளதாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பிளாஸ்மா சிகிச்சை மூலம் தீவிர கொரோனா நோய் தொற்றில் இருந்த 54 வயது நிரம்பிய ஒருவர் 12 மணி நேரத்தில் குணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, பிளாஸ்மா முறையை பின்பற்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.