இந்தியாவில் தமிழகத்தில் பெட்ரோலின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில், ஒரு நாடு பெட்ரோலை லிட்டருக்கு 1 ரூபாய் விற்றுக்கொண்டிருப்பது அதிர்ச்சியையே ஏற்படுத்துகிறது.
உலகிலேயே கச்சா எண்ணெய் வளம் அதிகம் உள்ள நாடு என்ற பெருமைக்கு உரியது வெனிசுலா. தற்போது கொரோனா பரவலால் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையை சமாளிக்க அந்த நாடு கடந்த மாத இறுதியில் பெட்ரோல் விலையை கடுமையாக உயர்த்தியது.
அதாவது ஏறக்குறைய 25 மடங்கு அளவுக்கு பெட்ரோல் விலையை உயர்த்தியது அந்நாட்டு அரசு. இவ்வளவு கடுமையான விலை உயர்வுக்கு பின்னும் அங்கு ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 37 ரூபாய் 50 காசுகள் தானாம். அதற்கு முன்பு வரை ஒன்றரை ரூபாய்க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விற்கப்பட்டுள்ளது.
விலை உயர்வுக்கு பின்னும் கூட கார்களுக்கு மாதம் தோறும் 120 லிட்டர் பெட்ரோல் சலுகை விலையான ஒரு லிட்டர் ஒன்றரை ரூபாய் விலைக்கே தரப்படுகிறது.
இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் இதே விலையில் மாதம் 60 லிட்டர் பெட்ரோல் நிரப்பிக் கொள்ளலாம். அதற்கு மேல் தேவை என்றால் ஒரு லிட்டருக்கு 37 ரூபாய் 50 காசு கொடுக்க வேண்டும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.