அவுஸ்திரேலியாவில் கிறீஸ்மஸ் தீவில் தஞ்சமடைந்துள்ள பிரியா சுகயீனம் காரணமாக பேர்த் வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையில் அவர் பிள்ளைகளை பிரிந்திருப்பதனால் பெரும் வேதனை அடைவதாக தெரிவித்துள்ளார்.
அவர்களை தன்னுடன் இருக்க அரசாங்கம் அனுமதிக்க வேண்டுமென அவர் அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக சென்று குடியேறிய குற்றச்சாட்டில் இலங்கையைச் சேர்ந்த பிரியா, நடேஷ் தம்பதியினரையும் குழந்தைகளையும் கிறிஸ்மஸ்தீவில் அந்நாட்டு அரசாங்கம் தடுத்து வைத்துள்ளது.
கடந்த இரண்டு வாரங்களாக வயிற்றுவலி உட்பட உடல் நலக்குறைவுகள் குறித்து தொடர்ந்து முறைப்பாடு செய்து வந்த நிலையில் அவருக்கு வருத்தம் அதிகரிக்கவே பிரியாவை மாத்திரம் அதிகாரிகள் பேர்த்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
ஆனால் அவரது கணவர் நடேஷ் முருகப்பனும் பிள்ளைகள் கோபிகாவும் தருணிகாவும் தொடர்ந்தும் கிறிஸ்மஸ் தீவிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
எனது உடல்நிலை காரணமாக நான் கடும் வேதனையில் உள்ளேன். அதனை விட எனது பிள்ளைகளை பிரிந்திருப்பது இன்னமும் அதிக மனவேதனையை ஏற்படுத்துகின்றது.
எனது ஐந்து வயது மற்றும் 3 வயது பிள்ளைகளுடன் தொலைபேசியில் உரையாடியபோது அவர்கள் அழுதார்கள். அவர்கள் என்னை வருமாறு அழைக்கின்றனர் . இங்கு வருவதற்கு விரும்புகின்றனர்.
நான் சிகிச்சை பெறும்போது அவர்கள் எனது அருகில் இருப்பதே எனக்கு ஆதரவு. ஆனால் தற்போது எனக்கு ஆதரவாக இருந்த குடும்பத்தினரையும் பறித்துவிட்டனர்.
நான் நெருக்கடியான நிலையில் உள்ளேன். ஆகவே அவர்களை எனது அருகில் இருப்பதற்கு அனுமதிக்குமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றேன் எனவும் அவர் கூறியுள்ளார்.