தட்டார்மடம் அருகே இளைஞர் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்தவர் தனிஷ்லாஸ் மகன் செல்வன் (வயது 32). தண்ணீர் கேன் வியாபாரியான இவர் கடந்த 17-ந்தேதி காரில் கடத்தி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில், உசரத்துகுடியிருப்பைச் சேர்ந்த
அ.தி.மு.க. தெற்கு மாவட்ட வர்த்தகர் அணி தலைவரான திருமணவேலுக்கும், செல்வனுக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்ததும், இதில் செல்வன் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.
மேலும் திருமணவேலின் தூண்டுதலின்பேரில், செல்வன் மற்றும் அவரது சகோதரர்கள் மீது தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் பொய் புகார்களில் வழக்குப்பதிவு செய்து துன்புறுத்தியதாக செல்வனின் தாயார் எலிசபெத் புகார் அளித்திருந்தார். இதையடுத்து தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், திருமணவேல் உள்ளிட்டவர்கள் மீது கொலை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக 3 பேரை கைது செய்த போலீசார், தலைமறைவான திருமணவேல் உள்ளிட்டவர்களை வலைவீசி தேடி வந்தனர். பின்னர் திருமணவேல் உள்பட 2 பேர் இன்று சென்னையில் உள்ள நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
இந்நிலையில் இளைஞர் கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார். அதே போல வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரி கிருஷ்ணனை சஸ்பெண்ட் செய்தும் நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபினபு உத்தரவிட்டார். இதனிடையே கொலையாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும், செல்வனின் மனைவிக்கு நிவாரண உதவி, அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, செல்வனின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அவரது குடும்பத்தினர், உறவினர்களுடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, நிவாரண நிதி, பசுமை வீடு வழங்க அரசுக்கு பரிந்துரை செய்து வழங்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து உடலை வாங்க உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர்.