ஸ்ரீலங்காவின் க.பொ.த சாதாரண மற்றும் உயர்தரப்பரீட்சைகளில் தமது திறமையை வெளிப்படுத்திய 304 மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 50,000 ரூபா பெறுமதியான புலமைப்பரிசில் உதவி பாகிஸ்தானிய தூதரகத்தினால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்காவில் க.பொ.த சாதாரணதர மற்றும் உயர்தரப்பரீட்சைகளில் தமது திறமையை வெளிப்படுத்தும் மாணவர்களுக்கு கடந்த 2006 இல் பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகரகத்தினால் வருடாந்தம் முகமது அலி ஜின்னாவின் பெயரில் ‘ஜின்னா புலமைப்பரிசில்’ உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு சாதாரண மற்றும் உயர்தரப்பரீட்சைகளில் திறம்பட செயற்பட்ட மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகரகத்தின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த ‘ஜின்னா புலமைப்பரிசில்’ யாழ்ப்பாணம் வேம்படி உயர்தர பெண்கள் பாடசாலையைச் சேர்ந்த செல்வி.அபர்ணா கருணாகரன் தகுதிபெற்றுள்ளார்.
இவர் கடந்த வருடம் 2019ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரத்தில் உயிரியல் பிரிவில் தோற்றி முதன்மைப் பெறுபேற்றினை பெற்றிருந்தார்.
இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் முகமட் சாத் கட்டாகின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ, கல்வி மறுசீரமைப்பு மற்றும் திறந்த பல்கலைக்கழகங்கள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் விசேட அதிதிகளாகக் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.