பிரதமர் மஹிந்த ராஜபக்ச இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்க இராஜாங்க செயலாளரை சந்திப்பதற்கு விரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ நேற்று முன்தினம் கொழும்புக்கு வந்திருந்த நிலையில், நேற்றைய தினம் இராஜதந்திர கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில், இலங்கைக்கான தனது விஜயத்தின் போது அமெரிக்கா இராஜாங்க செயலாளர் ஜனாதிபதியையும் வெளிவிவகார செயலாளரையும் சந்தித்த போதிலும் பிரதமரை சந்திக்காதது அரசியல் வட்டாரங்களில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள அமைச்சர் விமல் வீரவன்ச, நான் அறிந்தவரையில் பிரதமர் மைக் பொம்பியோவை சந்திப்பது குறித்து ஆர்வம் காட்டவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ இலங்கைக்கு விஜயம் செய்த போது தாம் எவ்வித பதற்றமும் அடையவில்லை. அரசியல் ரீதியாக அநாதைகளாகியுள்ள சஜித் தரப்பும், ஜே.பி.பியும் பொம்பியோவின் விஜயத்தின் போது பெரிதும் பதற்றமடைந்த போதிலும் அவ்வாறு செய்ய வேண்டிய அவசியம் எமக்கு இல்லை.
நாட்டின் ஆட்சியாளர் முதுகெலும்புடைய தீர்க்கமான முடிவுகளை எடுக்கக் கூடியவர் என்றால், உலக வல்லரசு என்றாலும் அழுத்தங்களை பிரயோகிக்காது. ரணில் விக்ரமசிங்க போன்ற கோழைகள் ஆட்சியில் இருந்திருந்தால் பொம்பியோவின் விஜயத்தின் போது பதற்றமடைந்திருக்க வேண்டும். ஏனெனில் உலக வல்லாதிக்க நாடுகளின் தாளத்திற்கு இவ்வாறான கோழை ஆட்சியாளர்கள் ஆடக்கூடியவர்களாவர்.
எனினும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட இந்த அரசாங்கம அவ்வாறு கோழைத்தனமானது அல்ல. நாட்டின் இறைமை, பௌதீக ஒருமைப்பாடு என்பன குறித்து மிகுந்த கரிசனையுடைய அரசாங்கம்.
பொம்பியோ இந்தியா மீது பிரயோகித்த அழுத்தங்களைக்கூட இலங்கையின் மீது இந்த விஜயத்தின் போது பிரயோகிக்கவில்லை எனவும் இதற்கு ஜனாதிபதி கோட்டபாயவின் தைரியமிக்க ஆட்சியே காரணம் என்றும் விமல் தெரிவித்துள்ளார்.