பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (18) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் முனையம் இரண்டிற்கான பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.
சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தின் கீழ் விமான நிலைய விமான போக்குவரத்து (ஸ்ரீ லங்கா) தனியார் நிறுவனம் இலங்கையின் சர்வதேச விமான நிலையங்களை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள நிலையில், இந்த திட்டத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
2014ஆம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜப்பானின் பிரதமர் ஷின்ஷோ அபேயின் பங்கேற்புடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாம் கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
விமான நிலையத்தின் 02ஆம் கட்ட பணிகள் 2014ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட போதிலும், 2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் அந்த அபிவிருத்தி திட்டத்தை முன்னெடுத்து செல்வதை பல்வேறு காரணங்களை முன்வைத்து தாமதப்படுத்தியது. அதன் காரணமாக நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் இந்த அபிவிருத்தி வேலைத்திட்டம் தடைப்பட்டது.
எனினும், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் இதன் கட்டுமான பணிகளை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அது கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய விரிவாக்க திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை துரிதப்படுத்துவதாக சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தில் குறிப்பிடப்பட்டதை உறுதிபடுத்தும் வகையிலாகும்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினத்தை முன்னிட்டும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவியேற்பின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டும் இத்திட்டத்தின் கட்டுமான பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எதிர்காலத்தில் எதிர்பார்க்கப்படும் சுற்றுலாப் பயணிகளின் வளர்ச்சிக்கு ஏற்ப, அதற்கான வசதிகளை ஏற்படுத்துவதற்கும், விமான நிலையத்தை பயன்படுத்தும் ஏனைய பயணிகளை ஊக்குவிப்பிற்கும் தீர்வாக ஆரம்பிக்கப்பட்ட விமான நிலையம் மற்றும் விமான போக்குவரத்து நிறுவனம் சர்வதேச விமான சேவை தொடர்புகளின் போது நட்பான சூழலை ஏற்படுத்தி ஒரு நிலையான பொருளாதாரத்தை நோக்கிய பயணத்திற்கு வழிவகுக்கிறது.
தற்போதுள்ள பயணிகள் முனையம் 60 இலட்சம் பயணிகளைக் கையாளவே போதுமானதாக உள்ளமையால், பயணிகள் நடவடிக்கைகளுக்கு போதுமான முனைய வசதிகள் இல்லாதது ஒரு பிரச்சினையாக உள்ளது.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாம் கட்ட பணிகளின் சேவை வழங்குனர்களாக விமான நிலைய மற்றும் விமான போக்குவரத்து அதிகாரசபை காணப்படுகிறது. அதன் ஆலோசகர்களாக ஜே.வி., ஜப்பான் விமான நிலைய ஆலோசனை நிறுவனம் மற்றும் நிபோன் கோய் நிறுவனம் ஆகியன காணப்படுகின்றன.
மூன்று வருட காலப்பகுதிக்குள் இதன் பணிகளை நிறைவுசெய்ய எதிர்பார்க்கப்படுவதுடன், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (ஜெய்கா) இதன் நிதி வழங்குனராக செயற்படுகிறது.
ஜப்பானின் டாய்சேய் நிறுவனம் திட்ட ஒப்பந்தக்காரராக செயல்படுகிறது. பணிகள் நிறைவடைந்தவுடன் 90 இலட்சம் பயணிகள் திறனை கொண்டதாக செயற்படவுள்ள இதன் மொத்த கடன் தொகையில் 100 வீதமும் விமான நிலைய மற்றும் விமான போக்குவரத்து நிறுவனத்தினால் செலுத்தப்படும்.
நவீன தொழில்நுட்ப பயன்பாட்டின் மூலம் பணிகள் நிறைவு செய்யப்படவுள்ள இத்திட்டத்தில், வருகைத் தரும் மற்றும் வெளியேறும் பயணிகளை வேறுபடுத்தல், மையப்படுத்தப்பட்ட பாதுகாப்பு கட்டுப்பாட்டு அமைப்பு, பல மாடிகளை கொண்ட வாகன நிறுத்துமிடங்களிலிருந்து விமான நிலையத்திற்கு நேரடியாக வருகை தரல் மற்றும் வெளிச் செல்லும் வசதி, பெரிய விமானங்களின் பயணங்களுக்கென ஒதுக்கப்பட்ட பயணிகள் நுழைவாயில் (Air Bus A380), சிறப்பு விருந்தினர் ஓய்வறை, விமான பணியாளர் ஓய்வறை – வருகைகள் மற்றும் புறப்பாடு, நுழைவாயில்களை அண்மித்த ஓய்வறைகள், சுங்க வரிகள் அற்ற கடைகள், உணவகங்கள், பார்வையாளர் கூடம் முதலியவற்றை உள்ளடக்கிய முழுமையான தளவமைப்பைக் கொண்டுள்ளன.