தமிழகத்தில் டாக்டருக்கு படித்திருந்த திருநங்கை ஒருவர் பிச்சையெடுத்த சம்பவம் கண்கலங்க வைத்துள்ளது.
மதுரை மாவட்டம் திலகர் திடல் காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதியில் பொலிசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கே சுற்றித்திரிந்த திருநங்கையை பொலிசார் சந்தேகத்தின் பேரில் அழைத்து விசாரித்தனர். அப்போது அவர் தான் எம்.பி.பி.எஸ் படித்திருப்பதாக கூறியிருக்கிறார்.
இதை நம்பாத பொலிசார் திருநங்கையை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று அங்கிருக்கும் ஆய்வாளர் கவிதா முன்பு ஆஜர்படுத்தினர்.
அப்போது அவர் நீ மருத்துவர் படித்திருக்கிறாய் என்பதை நாங்கள் எப்படி நம்புவது என்று கேட்க, அவர் உடனே தனக்கு தெரிந்த திருநங்கை ஒருவரை போனில் அழைத்து, தன்னுடைய படிப்பு சான்றிதழ்கள் அனைத்தையும் கொண்டு வரும் படி கூறியுள்ளார்.
அதன் பின் அதை வாங்கிப் பார்த்த காவல் ஆய்வாளர் ஒரு நிமிடம் ஆடிப் போயுள்ளார். ஏனெனில் அதில் இருந்த அனைத்தும் உண்மை.
இதையடுத்து, இவ்வளவு படிப்பு படித்துவிட்டு ஏன் சாலையில் பிச்சை எடுக்கிறாய்? என்று கேட்ட போது, நான் திருநங்கைதான் என்று சான்றிதழ் வாங்குவதற்கு மிகவும் சிரமமாக இருக்கிறது.
சமுதாயத்திலும் எனக்கு நிரந்தரமான அங்கீகாரம் இல்லை. இதனால் வேறு வழியில்லாம இப்படி சாலையில் அலைந்து பிச்சையெடுத்து வருகிறேன் என்று கண்கலங்கியுள்ளார்.
இதைக் கேட்ட காவல் ஆய்வாளர் கவிதா, உடனடியாக உயரதிகாரிகளிடம் தெரிவிக்க, உயரதிகாரிகளின் உதவியுடன் கிளினிக் அமைத்துக்கொடுத்து, தனது சொந்த செலவில் மருத்துவ உபகரணங்கள் வாங்கி கொடுத்து உதவியுள்ளார் கவிதா.
இவரின் செயல் சமூகவலைத்தளங்களில் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.