லங்கா ப்ரீமியர் லீக் (LPL) தொடரில் காலி கிளாடியேட்டர்ஸ் அணியை 34 ஓட்டங்களில் கொழும்பு கிங்ஸ் அணி தோற்கடித்துள்ளது.
நேற்றிரவு நடைபெற்ற இப்போட்டியில் அஞ்சலோ மெத்தியூஸ் தலைமையிலான கொழும்பு கிங்ஸ் அணியும், ஷாஹித் அப்ரிடி தலைமையிலான காலி கிளாடியேட்டர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தியது.
தொடர் மழைக் காரணமாக போட்டியானது 5 ஓவர்கள் கொண்டதாக குறைக்கப்பட்டது.
முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு அணியானது ரஸ்ஸலின் அபார ஆட்டத்தினால் நிர்ணயிக்கப்பட்ட 5 ஓவர்களுக்கு ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 96 ஓட்டங்களை குவித்தது.
கொழும்பு அணி சார்பில் திக்ஷிலா டி சில்வா டக்கவுட்டன் ஆட்டமிழக்க, ரஸ்ஸல்ஸ் 19 பந்துகளை எதிர்கொண்டு 4 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள் அடங்கலாக 65 ஓட்டங்களையும், லஹிரு இவன்ஸ் 10 பந்துகளுக்கு 21 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்றனர்.
பந்து வீச்சில் காலி அணி சார்பில் மொஹமட் அமீர் 2 ஓவர்களுக்கு பந்து வீசி 46 ஓட்டங்களையும், அஷித பெர்னாண்டோ ஒரு ஓவர் பந்து வீசி 26 ஓட்டங்களையும் அதிகபடியாக வாரி வழங்கியிருந்தனர்.
97 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய காலி அணி 5 ஓவர்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து 62 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 34 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியது.
இப்போட்டியில் அபாரமாக விளையாடிய ரஸ்ஸல்ஸ் ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார்.