சேலம் மாவட்டம் சங்ககிரி ஒன்றியம் கத்தேரி கிராமம் சாமியாம்பாளையத்தைச் சேர்ந்தவர் அன்பரசு. கவுந்தப்பாடியைச் சேர்ந்த சுந்தரராஜன் மனைவி பத்மாவுடன் இவருக்கு காதல் ஏற்பட்டு 3 மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் பத்மாவிற்கு தமிழ்ச்செல்வன் என்பவருடன் 3வதாக காதல் ஏற்பட்டுள்ளது. அதனால், அன்பரசை விட்டுவிட்டு தமிழ்ச் செல்வனுடன் வாழ முடிவு செய்தார் பத்மா. அடிக்கடி இருவரும் பைக்கில் ஊர் சுற்றி வந்தனர்.
இந்தத் தகவலை அறிந்த அன்பரசு, மனைவி பத்மாவிடம் தகராறு செய்துள்ளார். எனினும் பத்மா தனது முடிவில் உறுதியாக இருந்தார். இதற்கிடையே, புதன்கிழமை மாலை தமிழ்ச்செல்வனும் பத்மாவும் சாமியாம்பாளையத்தில் இருந்து கத்தேரிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.
தகவல் அறிந்த அன்பரசு கையில் மிளகாய்ப் பொடியுடன் சென்று இருவரையும் வழிமறித்துள்ளார். தமிழ்ச்செல்வன் வாகனத்தை நிறுத்தியதும் அவர் மீது மிளகாய்ப் பொடியைத் துாவியுள்ளார். தமிழ்ச்செல்வன் திணறியபோது, பின்னால் இருந்து இறங்கிய பத்மாவின் வயிற்றில் கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளார் அன்பரசு.
தமிழ்ச்செல்வன் தப்பியோடி தேவூர் காவல்நிலையத்தில் புகாரளித்தார். விரைந்து சென்ற போலீசார் பத்மாவை மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பின், ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்தப் பகுதியில் பதுங்கியிருந்த அன்பரசைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தன்னை நிராகரித்துவிட்டு வேறொரு காதலனுடன் சென்ற மனைவியை 2வது கணவனே கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்