அவுஸ்திரேலியா அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷர்குல் தார்கூர் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டது.
இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி தி காபாவில் நடைபெற்று வருகிறது.
இதில் அவுஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 369 ஓட்டங்கள் எடுத்தது. அதன் பின் ஆடிய இந்திய அணிக்கு துவக்க வீரரான ரோகித் சர்மா 44 ஓட்டங்களும், சுப்மன் கில் 7 ஓட்டங்களிலும், சட்டீஸ்வர் புஜாரா 25 ஓட்டங்கள், அஜின்கியே ரஹானே 37 என வெளியேற, இந்திய அணி தடுமாறிக் கொண்டிருந்தது.
இதனால் ஒரு கட்டத்தில், இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 186 ஓட்டங்கள் எடுத்திருந்ததால், 250 ஓட்டங்களுக்குள் சுருட்டிவிடலாம் என அவுஸ்திரேலியா பந்து வீச்சாளர்கள் நினைக்க, தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷர்துல் தாகூர், அவுஸ்திரேலியாவின் பந்து வீச்சை நிதானமாக விளையாடினர்.
யாரும் எதிர்பார்க்காத வகையில் ஷர்துல் தாகூர், சிறப்பாக விளையாடி, அதற்கு இணையாக வாஷிங்டன் சுந்தரும் விளையாட, இருவரும் அரைசதம் அடித்தனர்.
இந்த ஜோடி 123 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் போட்டிருந்த போது, ஷர்துல் தாகூர் 67 ஓட்டங்களில் வெளியேற, இவரைத் தொடர்ந்து விளையாடிய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரும் 62 ஓட்டங்களில் பவுலியன் திரும்ப, இறுதியாக இந்திய அணி 10 விக்கெட் இழப்பிற்கு 336 ஓட்டங்கள் எடுத்தது.
ஒரு கட்டத்தில் 250-ஐ தாண்டுமா? என்ற போது வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷர்துல் தாகூரின் சிறப்பான ஆட்டத்தால், இந்திய அணி 300 ஓட்டங்களை கடந்துள்ளதால், இருவரையும் ரசிகர்கள் மற்றும் முன்னணி வீரர்கள் பாராட்டி வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய அவுஸ்திரேலியா அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.