பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை போடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக பிரித்தானியாவில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ராஜெனேகா நிறுவனமும் இணைந்து ஒரு தடுப்பு மருந்தை உருவாக்கியது.
இந்த மருந்து பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனேகாவின் தடுப்பு மருந்தால் ரத்த உறைவு ஏற்படுவதாக புகார் எழுந்தன. இதனால் அந்த தடுப்பு மருந்தை பல்வேறு ஐரோப்பிய நாடுகள் நிறுத்தி வைத்துள்ளன.
ஆனால் ஆக்ஸ்போர்டின் தடுப்பூசியால் ரத்த உறைவு ஏற்படுவதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பும், ஐரோப்பிய மருந்து ஒழுங்கு முறை ஆணையமும் தெரிவித்துள்ளன.
இந்தநிலையில் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன், தான் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின் தடுப்பு மருந்தை செலுத்தப் போவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பாராளுமன்றத்தில் கூறுகையில், விரைவில் நான் தடுப்பு மருந்தை செலுத்திக்கொள்ள போகிறேன். இதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அந்த தடுப்பு மருந்து நிச்சயமாக ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனேகாவின் மருந்தாக இருக்கும். அதைத்தான் நான் போட்டுக்கொள்ள போகிறேன்
மேலும் தடுப்பு மருந்தால் ரத்த உறைவு ஏற்படுவதாக கூறி பல்வேறு நாடுகள் நிறுத்தி வைத்துள்ளது குறித்து பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் அந்த கருத்தை போரிஸ் ஜோன்சன் நிராகரித்தார்.