மில்லர் மற்றும் கிறிஸ் மோரிஸின் அதிரடி ஆட்டத்தினால் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது ராஜஸ்தான் ரோயல்ஸ்.
14 ஆவது ஐ.பி.எல். தொடரின் 7 ஆவது லீக் ஆட்டம் நேற்றிரவு மும்பையில் ரிஷாத் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கிடையே ஆரம்பமானது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி டெல்லி அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. முன்னணி வீரர்களான பிரித்வி ஷா (2), ஷிகர் தவான் (9), ரகானே (8) ஆகியோரை இடது கை வேகப்பந்து வீச்சாளர் உனத்கட் இன் பந்து வீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேற்றினார்.
அடுத்து மார்கஸ் ஸ்டாய்னிஸை டக்அவுட்டில் வெளியேற்றினார் முஸ்தாபிசுர் ரஹ்மான். இதனால் டெல்லி அணி 37 ஓட்டங்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்து திணறியது.
அணித் தலைவர் ரிஷாத் பந்த் ஒருபக்கம் நிலைத்து நின்று சிறப்பாக விளையாடி 32 பந்துகளில் 9 பவுண்டரியுடன் 51 ஓட்டங்களை எடுத்து ரன்அவுட் ஆனார்.
அதன் பின்னர் லலித் யாதவ் 20 ஓட்டங்களுடனும், டொம் கர்ரன் 21 ஓட்டங்களுடனும், கிறிஸ் வோக்ஸ் ஆட்டமிழக்காமல் 15 ஓட்டங்களையும் பெற டெல்லி அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 147 ஓட்டங்களை எடுத்தது.
148 ஓட்டம் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லர், மனன் வோரா ஆகியோர் களமிறங்கினர்.
டெல்லி அணியின் சிறப்பான பந்து வீச்சுகளினால் பட்லர் (2), வோரா (9), சஞ்சு சாம்சன் (4), ஷிவம் டூபே (2), ரியான் பராக் (2) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
ராஜஸ்தான் அணி ஒரு கட்டத்தில் 42 ஓட்டங்களை எடுப்பதற்குள் 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் டேவிட் மில்லர் அரை சதமடித்து 47 பந்தில் 62 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த ராகுல் திவாட்டியா 19 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
இறுதியில் கிறிஸ் மோரிஸும், உனத்கட்டும் கிடைத்த பந்துகளில் சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசித் தள்ளினர்.
இறுதி ஓவரில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற 12 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
கிறிஸ் மோரிஸ் 2 சிக்ஸருடன் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். மோரிஸ் மொத்தமாக 18 பந்தில் 4 சிக்ஸர்களுடன் 36 ஓட்டங்களுடனும், உனத்கட் 11 ஓட்டங்களுடனும் அவுட்டாகாமல் இருந்தனர்.
இதன்மூலம் 3 விக்கெட் வித்தியாசத்தில் மீதமாக 2 பந்துகள் இருக்க ராஜஸ்தான் அணி முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
போட்டியின் ஆட்டநாயகனாக உனத்கட் தெரிவானார்.