கொழும்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் நான்கு மேம்பாலங்களை அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக மேம்பாலங்களை நிர்மாணிக்க நெடுஞ்சாலை அமைச்சர் ஜான்ஸ்டன் பெர்னாண்டோ சமர்ப்பித்த திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி, நீதிபதி அக்பர் மவத்தை மற்றும் உத்தரானந்த மாவத்தையிலிந்து கொம்பனி தெரு ரயில்வே சாலை வழியாக இரண்டு மேம்பாலங்கள் அமைக்கப்படவுள்ளது. குறித்த இரண்டு மேம்பாலங்களை இணைக்க மற்றொரு மேம்பாலம் கட்டப்படும்.
நீதிபதி அக்பர் மாவத்தையில் நிர்மாணிக்கப்படவுள்ள மேம்பாலம் 207 மீற்றர் நீளமும், 8.4 மீற்றர் அகலமும் கொண்டதாக இருக்கும். உத்தரானந்தா மாவத்தையில் அமைக்கப்படவுள்ள மேம்பாலம் 396 மீற்றர் நீளமும், 10.4 மீற்றர் அகலமும் கொண்டதாக இருக்கும்.
இணைக்கும் மேம்பாலம் 310 நீளமும், 6.9 மீற்றர் அகலமும் கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மேம்பாலங்களை நிர்மாணிக்க 5270 மில்லியன் ரூபா செலவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பாலதக்ஷா மாவத்தையிலிருந்து சித்தம்பலா ஏ. கார்டினர் மவத்தை வரை பெய்ரா ஏரி மற்றும் கொம்பனித்தெரு ரயில்வே சாலை வழியாக மற்றொரு மேம்பாலம் அமைக்கப்படும்.
360 மீற்றர் நீளமும் 11 மீற்றர் அகலமும் கொண்ட இந்த மேம்பாலம் 2730 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளது. அடுத்த 12 மாதங்களுக்குள் குறித்த நான்கு மேம்பாலங்களையும் நிர்மாணிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை அமைச்சு தெரிவித்துள்ளது.