கொரோனா உச்சம்பெற்ற மாவட்டங்களில் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், நாளை கோவை வருகிறார்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. கடந்த இரு தினங்களாக 33 ஆயிரத்தை கடந்த பாதிப்புகளே பதிவாகியுள்ளன. குறிப்பாக, சென்னை, கோவை, திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில்தான் கொரோனா தொற்று அதிகம் பரவி வருகிறது. அதிலும், மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 10 நாட்களில் கோவையில்தான் தொற்று அதிகம் பரவி வருவது தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், கொரோனா உச்சம்பெற்ற மாவட்டங்களில் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், நாளை கோவை வருகிறார். இதன்ஒரு பகுதியாக, அவர் சேலத்தில் இருந்து கார் மூலமாக கோவைக்கு நாளை காலை 11 மணிக்கு வருகிறார். பின்னர் கோவை கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகள் பங்கு பெறும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
இதைத் தொடர்ந்து, 250 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ள கோவை அரசு கலை, அறிவியல் கல்லூரியின் கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை திறந்து வைத்து பார்வையிடுகிறார். பின்னர் அரசினர் விருந்தினர் மாளிகைக்கு சென்று மதிய உணவு முடித்த பின்னர் விமானம் மூலமாக சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி சட்டம், ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. தாமரை கண்ணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.