ஜாக்கி ஷெராப், ரவி கிருஷ்ணா, சம்பத் ராஜ் நடிப்பில் உருவாகி இருந்த ‘ஆரண்ய காண்டம்’ படத்தை தியாகராஜன் குமாரராஜா இயக்கி இருந்தார்.
தியாகராஜன் குமாரராஜா இயக்குனராக அறிமுகமான படம் ‘ஆரண்ய காண்டம்’. எஸ்.பி.பி. சரண் தயாரித்த இந்தப் படம் கடந்த 2011-ம் ஆண்டு வெளியானது. இதில் ஜாக்கி ஷெராப், ரவி கிருஷ்ணா, சம்பத் ராஜ், யாஷ்மின் பொன்னப்பா, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. வெளியீட்டின் போது வெற்றி பெறாமல், பின்னர் மக்களால் கொண்டாடப்பட்ட படங்களில் ‘ஆரண்ய காண்டம்’ முக்கியமானது. இப்படம் வசூல் ரீதியாக நஷ்டமடைந்தாலும், விருதுகளை வென்று குவித்தது. குறிப்பாக சிறந்த படத்தொகுப்பு, சிறந்த அறிமுக இயக்குனர் ஆகிய தேசிய விருதுகளையும் வென்றது.இப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போது இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர். பாலிவுட் திரையுலகின் முன்னணித் தயாரிப்பு நிறுவனமான டிப்ஸ் நிறுவனம் இதன் ரீமேக் உரிமையை கைப்பற்றியுள்ளது. அடுத்த ஆண்டு இந்தப் படத்தின் ரீமேக் பணிகள் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.