ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் ஒரு சில பங்காளி கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கான வாய்ப்பு உண்டு என இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
ராஜபக்க்ஷ அரசாங்கத்தில் எவரும் இணைந்துக் கொள்ளலாம், விருப்பமில்லாவிடின் தாராளமாக வெளியேறலாம் எனவும் பங்காளி கட்சிகள் வெளியேறுவதால் எவ்வித பாதிப்பும் பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்திற்கு ஏற்படாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
பல்வேறு கொள்கைகயையுடைய அரசியல் கட்சிகளை ஒன்றினைத்து ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியை அமைத்துள்ளோம். இக்கூட்டணியில் பொதுஜன பெரமுன பிரதான கட்சியாக உள்ளது.
கூட்டணிக்குள் கருத்து வேறுப்பாடுகள் பல காணப்படுகின்றன. அரசாங்கத்தில் இருந்து வெளியேறவுள்ளதாக சுதந்திர கட்சியின் ஒரு சில உறுப்பினர்கள் குறிப்பிட்டுக்கொள்கிறார்கள்.
அமைச்சு பதவிகளையும், இராஜாங்க அமைச்சு பதவிகளையும், அரச வரப்பிரசாதங்களை பெற்றுக் கொண்டுள்ளவர்கள் அரசாங்கத்தில் இருக்க விருப்பமில்லையென்றால் வெளியேறுவோம் என்று கூறிக் கொண்டிருக்காமல் அரசாங்கத்தில் இருந்து தாராளமாக வெளியேறலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.