கொரோனா தொற்றுக்கு தான் உள்ளாகியுள்ளதாக சந்தேகித்து, பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்து கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முகத்துவாரம் பொலிஸ் நிலையத்தில், பயிற்சிக்கால பொலிஸ் கான்ஸ்டபிளாக கடமையாற்றிய 24 வயதுடைய பதுளை – ராகல பகுதியைச் சேர்ந்த பொலிஸ் காண்ஸ்டபிளே இவ்வாறு தூக்கிட்டு உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.
தனக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக எண்ணுவதாகவும், அதனால் தன்னுடன் ஒன்றாகப் பழகும் ஏனைய பொலிஸ் நண்பர்களுக்கும் அது தொற்றலாம் என நினைப்பதால் தான் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
இது தொடர்பில் கான்ஸ்டபிள் கடிதம் எழுதி வைத்திருந்த நிலையில் கடிதம் ஒன்றினை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பின் முகத்துவாரம் பொலிஸ் நிலைய தங்குமிட, கழிவறையில் தனது போர்வையை உபயோகித்து நேற்று மாலை 5.30 மணியளவில் இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இவ்வாறு தற்கொலை செய்துகொண்ட பொலிஸ் காண்ஸ்டபிள் கடந்த மார்ச் 15 ஆம் திகதியே, பொலிஸ் கல்லூரியில் பயிற்சிகளை நிறைவு செய்துள்ளதுடன் கடந்த ஆகஸ்ட் 12 ஆம் திகதியே முகத்துவாரம் பொலிஸ் நிலைய்த்துக்கு சேவைக்காக இணைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கொழும்பு மேலதிக நீதிவான் காஞ்சனா நெரஞ்சலா டி சில்வா, இன்று (10) ஸ்தலத்துக்கு சென்று நீதிவான் நீதிமன்ற விசாரணைகளை ஆரம்பித்ததுடன், சடலம் தொடர்பில் பிரேத பரிசோதனைகளை முன்னெடுக்க உத்தரவிட்டுள்ளார்.