ஃபிட்ச் தரமதிப்பீட்டு நிறுவனம், இலங்கையின் நீண்ட கால உள்ளூர் நாணயக் கடன் மதிப்பீட்டை ‘சீசீசீ’ இலிருந்து ‘சீசீ’க்கு இரண்டு புள்ளிகளால் தரமிறக்கியுள்ளது.
அதிக வட்டி வீதங்கள் மற்றும் இறுக்கமான உள்நாட்டு நிதி நிலைமைகள் காரணமாக, உள்ளூர் நாணயங்களிலான கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை காரணம் காட்டி, நேற்று (01.12.2022) இந்த தரமிறக்கல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஃபிட்ச் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ள விடயம்
அத்துடன், நாட்டின் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை பிரதிபலிக்கும் வகையில், இலங்கையின் வெளிநாட்டு நாணயக் கடன் மதிப்பீட்டையும் ஃபிட்ச் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதேவேளை 2026ஆம் ஆண்டில் நெருக்கடிக்கு முந்தைய நிலைகளுக்கு செல்லும் இலக்கை இலங்கை கொண்டுள்ளது என்று நிதி ராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க கடந்த புதன்கிழமை தெரிவித்திருந்தார்.
அத்துடன் இலங்கையின் கொள்கை வகுப்பாளர்கள் சர்வதேச நாணய நிதியத்தின் பிணையெடுப்பை முன்னெடுக்க உதவும் டிசம்பர் காலக்கெடுவை நோக்கி செயற்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.