- மசாலா பொருட்களில் பெருங்காயத்திற்கு என்றுமே தனி இடம் உண்டு.
- இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது.
உணவின் ருசியில் மசாலா பொருட்களுக்கு எந்தளவுக்கு பங்கு உள்ளதோ, அதேஅளவு அதனை தயார் செய்யும் போது உண்டாகும் மணத்திலும் உண்டு. இந்திய சமையலில் உள்ள மசாலா பொருட்களில் பெருங்காயத்திற்கு என்றுமே தனி இடம் உண்டு. இதற்கு காரணம் உணவில் ஒரு தனித்துவமான சுவையையும், மணத்தையும் அளிப்பதே ஆகும். சமைக்காத சமயங்களில் பெருங்காயத்தின் மணம் பலராலும் வெறுக்கத்தக்க அளவு இருக்கும் என்பதே உண்மை. ஆனால் அதில் உள்ள மருத்துவ குணங்களால் பெருங்காயம் ‘கடவுளின் அமிர்தம்’ என பல நாட்டு மக்களால் அழைக்கப்படுகிறது.
பெருங்காயத்தை உணவில் சேர்ப்பதால் ஏராளமான மருத்துவ குணங்கள் நமக்கு கிடைக்கிறது. உலகளவில் 170 வகையான இனங்களை கொண்டுள்ள பெருங்காயத்தின் 3 இனங்கள் இந்தியாவில் வளர்கின்றன. அப்படியான பெருங்காயத்தில் ஏற்படக்கூடிய நன்மைகள் சிலவற்றை இதில் பார்ப்போம்.
பெருங்காயத்தின் மிக முக்கியமான செயல்பாடுகளின் ஒன்று செரிமான பிரச்சினைகளுக்கு தீர்வு அளிப்பது ஆகும். இதற்கு வெங்காயம் மற்றும் பூண்டில் இருப்பதை விட அதிக மருத்துவ குணங்கள் பெருங்காயத்தில் இருப்பதே காரணம். இது ஆக்சிஜனேற்ற தடுப்பானாகவும், உணர்ச்சியை தூண்டும் தடுப்பானாகவும் செயல்படுவதால் வயிறு வீக்கம், வலி, குடல்புண், குடல் புழுக்கள், வாயு, வயிற்று எரிச்சல் ஆகிய பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைகிறது.
குறிப்பாக செரிமான பிரச்சினைகளில் உடனடி நிவாரணம் கிடைக்க சிறிது பெருங்காயத்தை தண்ணீரில் கரைத்து குடித்தால் சரியாகும். பெருங்காயம் வயிற்றில் உள்ள என்சைம்களின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்தி அமிலத்தன்மையை குறைப்பதால் இரைப்பை தொடர்பான பிரச்சினைகள் குணமாகிறது.
பெருங்காயத்தில் உள்ள வைரஸ் எதிர்ப்பு மற்றும் அலர்ஜி, ஆஸ்துமா மற்றும் சளி போன்ற சுவாசப்பிரச்சினைகளை சரி செய்கிறது. பெருங்காயத்தை இஞ்சி மற்றும் தேன் கலந்து நாள் ஒன்றுக்கு 3 முறை குடித்து வந்தால் வறட்டு இருமல், மார்பு சளி போன்றவை குணமாகும். மேலும் இது ஒரு சுவாச தூண்டுதலாக செயல்படுகிறது. நெஞ்சு எரிச்சல், இருமல் மற்றும் கபம் போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் சிறிது பெருங்காயத்தை தண்ணீர் கலந்து அரைத்து மார்பில் தேய்த்து வர குணமாகும்.