கட்டுநாயக்கவில் இருந்து சென்னை நோக்கிப் புறப்படவிருந்த விமானம் துப்பாக்கியால் தாமதமடைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று பிற்பகல் கட்டுநாயக்கவில் இருந்து இந்தியாவின் சென்னை நோக்கிப் புறப்படவிருந்த விமானத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர், தோட்டாக்கள் ஏற்றப்பட்ட துப்பாக்கியுடன் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு பயணிகள் முனையத்தை வந்துள்ளார்.
இதன் போது கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகாரிகளின் பொறுப்பில் அவர் எடுக்கப்பட்டமையினால் விமானம் புறப்பட 4 மணித்தியாலங்கள் தாமதமடைந்துள்ளதாக விமான நிலைய தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
துப்பாக்கியை ஒப்படைக்க வேண்டும்
விமானம், பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்புக்காக ஒவ்வொரு விமானத்திலும் இதுபோன்ற பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளனர். எனினும் பாதுகாப்பு அதிகாரி தனது துப்பாக்கியை விமானத்திலிருந்து வெளியே எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும் பாதுகாப்பு அதிகாரி விமானத்தை விட்டு வெளியேற விரும்பினால், அவர் துப்பாக்கியை விமானத்தின் தலைமை விமானியிடம் ஒப்படைக்க வேண்டும்.
இந்தியன் எயார்லைன்ஸின் AI-272 விமானத்தின் பாதுகாப்பு அதிகாரி, இந்திய விசேட அதிரடிப்படையின் அதிகாரியான அவர் இந்த விமானத்தின் பிரதான விமானியுடன் தனது துப்பாக்கியையும் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு முனையத்திற்கு கொண்டு வந்ததாக தெரியவந்துள்ளது.