அடுத்த வருடம் செப்டெம்பர் மாத இறுதிக்குள் துறைமுக நுழைவு அதிவேக நெடுஞ்சாலை மக்களிடம் கையளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பெருந்தெருக்கள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகளை அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் சீன பொறியியல் மற்றும் நிர்மாண நிறுவன அதிகாரிகள் நேற்று பார்வையிட்டனர்.
இதன்போது, ஊடகங்களுக்கு கருத்துவெளியிட்ட அமைச்சர் பந்துல குணவர்தன, நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக வீதி அமைப்பதற்கு வழங்கப்படும் நிதி பற்றாக்குறையாக உள்ளதாக தெரிவித்தார்.
69 சதவீதம் நிறைவு
இங்குரு கடை சந்தியிலிருந்து கொழும்பு துறைமுகம் ஊடாக துறைமுக நகரம் வரை செல்லும் இந்த அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் கடந்த 2019 செப்டம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டன.
5.3 கிலோமீற்றர் நீளமுடைய இந்த அதிவேக நெடுஞ்சாலை, ஐந்து நுழைவு வீதிகளையும் நான்கு வழி பாதைகளையும் கொண்டுள்ளது. இதன் நிர்மாண செலவுகள் 360 மில்லியன் அமெரிக்க டொலர்களென மதிப்பிடப்பட்டுள்ளது.
அதில் 300 மில்லியன் டொலர்கள் ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனுதவியாக வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்படும்.
இந்த மேம்பால அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணிகள், இதுவரை 69 சதவீதம் நிறைவடைந்துள்ளது.