பொருளாதார நெருக்கடி நிலைமையானது தொடர்ந்து உக்கிரமடைந்தால் மக்கள் அதிகளவில் நாட்டை விட்டுச் செல்வார்கள் என உலக வங்கியின் இலங்கை, மாலைதீவு மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கான பணிப்பாளர் பொரிஸ் ஹடாட் சர்வோஸ் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம்(20) கொழும்பில் இடம்பெற்ற மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு கூறிய அவர், பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து மிகவும் கவலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
வளமான மறுசீரமைப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில், “பொருளாதார சிரமங்களை எதிர்நோக்கும் குடும்பங்கள் தமது பிள்ளைகளின் பாடசாலைக் கல்வியை நிறுத்தி விடுவார்கள்.
தமது வர்த்தகத்தை முன்னெடுக்கும் நோக்கில் நிறுவனங்கள் சொத்துக்களை விற்க நேரிடும்.
எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதியத்தின் நீண்ட கால வசதிகளை பெற்றுக்கொள்ள முடிந்தமை, தேசிய கடனை மறுசீரமைப்பதற்காக நாடாளுமன்றத்தின் அனுமதியை பெற்றுக் கொண்டமை, உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கிகளிடம் சர்வதேச நிதி உதவியை பெற்றுக் கொள்ள முடிந்தமை போன்ற நிலைமைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு வாழ்த்துக் கூறுகிறேன்.
சிறந்த பிரதிபலனை எதிர்பார்க்கும் வளமான மறுசீரமைப்பை உள்ளடக்கிய நிகழ்ச்சி நிரலுக்கு அமைய கடினமான மற்றும் அவசியமான மறு சீரமைப்பு அவசியம்.
இதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை பாராட்டுகிறேன்” என்றார்.